PUBLISHED ON : செப் 14, 2026 12:44 AM

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு:
துாத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்து, கப்பல் கட்டும் தளம் அமைப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். வேளாண்மை முதல் உப்பளங்கள் வரை, இந்த நாட்டின் பாரம்பரிய தொழில்களை அழித்துவிட்டு, எதை வளர்த்தெடுக்கப் போகிறீர்கள்; அடுத்த தலைமுறையிடம் எவற்றை கையளிக்கப் போகிறீர்கள்?
இப்ப தான் பரந்துார் விமான நிலைய திட்டத்துக்கு மூடுவிழா நடத்தினாங்க... அடுத்து, கப்பல் கட்டும் தளத்துக்கு, 'ஆப்பு' வைக்க நீங்களும் கிளம்பிட்டீங்களா?
காங்., சமூக ஊடகத் துறையின், தமிழக தலைவர் வசந்தகுமார் எம்.பி., அறிக்கை:
நான் மாற்றுக் கட்சி நண்பர்களுக்கு, ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். சமூக வலைதளங்களில் எங்கள் கட்சி மீதோ, கட்சியின் இந்நாள், முன்னாள் தலைவர்கள் மீதோ அவதுாறாக எந்த செய்தியை பரப்பினாலும், அவர்களை ஆபாசமாக சித்தரிக்க முனைந்தாலோ, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அன்புடன் எச்சரிக்கிறேன். தனி நபர்களை இழிவுபடுத்துவதை தவிர்ப்போம்; நாகரிகமாகவும், கண்ணியமாகவும் அனைவரும் எழுதுவோம்.
இதுவரை உங்க கட்சியை கண்டபடி விமர்சனம் செஞ்சவங்க, இனிமே அடக்கி வாசிப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம்!
வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு பேச்சு:
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வெல்லும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அ.தி.மு.க.,வில் இருந்தவர்கள் தான், த.வெ.க.,வுக்கு வந்துள்ளனர்; அவர்கள் தான் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆகவே, வெற்றி வாய்ப்புகள் கூடுதலாகவே இருக்கும்.
அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவங்களுக்கு, அவங்களது பழைய ஆதரவாளர்கள் ஓட்டு போடுவாங்க என்ற நம்பிக்கையில் இப்படி சொல்றீங்களோ?
