/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வெளிநாடுகளுக்கு செல்லும் செட்டிநாடு பலகாரங்கள்!
/
வெளிநாடுகளுக்கு செல்லும் செட்டிநாடு பலகாரங்கள்!
PUBLISHED ON : மார் 16, 2026 02:16 AM

கடந்த, 24 ஆண்டுகளாக செட்டி நாட்டு பலகாரங்கள் தயார் செய்து, விற்பனை செய்து வரும், காரைக்குடியை சேர்ந்த, 70 வயதான சவுந்திரம்:
எனக்கு திருமணம் ஆனதும், காரைக்குடியில் குடியேறினோம். கணவர், கட்டட ஒப்பந்ததாரராக இருந்தார்; நல்ல வருமானம், இரண்டு பிள்ளைகள் என, வாழ்க்கை சந்தோஷமாக தான் சென்றது.
திடீரென ஒரு நாள் கணவருக்கு விபத்து ஏற்பட்டு, கை எலும்பு முறிந்து விட்டது.
அதற்கு பின், அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் பிள்ளைகளையும், கணவரையும், அழைத்துக் கொண்டு, அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன்.
ஒரு முறை உறவினர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முறுக்கு வாங்கி, பேருந்தில் மதுரைக்கு கொடுத்து விடச் சொன்னார்.
கடையில் வாங்கி கொடுப்பதற்கு பதில் நாமே செய்து கொடுக்கலாம் என்று யோசித்து, அம்மாவிடம் முறுக்கு எப்படி செய்வது என்று கேட்டுத் தெரிந்து, நானே முறுக்கு செய்து, மதுரைக்கு கொடுத்து அனுப்பினேன்.
முறுக்கை வாங்கியவர்களுக்கு சுவை பிடித்து விடவே, மறுபடியும் செய்து தரச் சொல்லி கேட்டனர். அப்படியே, பல்வேறு பலகாரங்களையும் செய்ய கற்றுக் கொண்டேன்.
எங்களிடம் பலகாரம் வாங்கிய வங்கி ஊழியர் ஒருவருக்கு சுவை பிடித்துப் போக, அவரே, வங்கியில் கடன் வாங்க உதவி செய்தார்; வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
வீட்டு மாடியில் குடிசை போட்டு பலகாரங்கள் செய்தேன்; வாடிக்கையாளர் அதிகரிக்கவே, 'சவுந்திரம் செட்டி நாடு பலகாரங்கள் அண்டு ஸ்வீட்ஸ்' என்ற பெயரில் கடை ஆரம்பித்து, விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.
எல்லாம் நன்கு சென்று கொண்டிருந்த சமயத்தில் , என் மகன், விபத்தில் இறந்து போனான். அந்த துயரத்தில் இருந்து மீள்வதற்காக, என் வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்தினேன். கணவரும் கடந்தாண்டு காலமாகி விட்டார்.
மன வருத்தத்தில் இருக்கும் போதெல்லாம், மகள் தான் ஆறுதல் கூறி, தொடர்ந்து வியாபாரம் செய்யச் சொல்லி உற்சாகப் படுத்தி வருகிறார்.
நான் சோர்ந்து போகும் போதெல்லாம், எனக்கு வரும், 'ஆர்டர்' தான், என்னை அடுத் தடுத்து நிற்காமல் ஓட வைக்கிறது.
வெளிநாட்டில் இருப்போரும், பலகாரங்களுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். எங்கள் நிறுவனத்தில், 30 பேர் வேலை பார்க்கின்றனர்.
எந்த துறையாக இருந்தாலும், சாதிக்க வேண்டும் என்று நினைத்து, உங்களை தயார்படுத்தி, தயங்காமல் இறங்குங்கள். எந்தச் சூழ்நிலையிலும் முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள்!
தொடர்புக்கு:
76976 90103

