'பரிதாபம் வேண்டாம் வாய்ப்பு கொடுங்கள் பதக்கம் வெல்வோம்!'
'பரிதாபம் வேண்டாம் வாய்ப்பு கொடுங்கள் பதக்கம் வெல்வோம்!'
PUBLISHED ON : ஜூலை 30, 2026 12:00 AM

மாற்றுத்திறனாளிகளுக்கு என, 'அமர் சேவா' சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான சங்கரராமனின் மனைவி, தென்காசி மாவட்டம், ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்த, 54 வயதாகும் புஷ்பா:
சென்னையில் பிறந்து வளர்ந்தேன். 1997ல், சென்னை துார்தர்ஷன் ஒளிபரப்பிய ஒரு ஆவணப் படத்தில் தான் சங்கரராமனை பார்த்தேன். 22 வயதில் ஆடிட்டர், அகில இந்திய அளவில் ஐந்தாவது, 'ரேங்க்' என, பிரமிக்க வைத்தார்.
தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் சமூக உயர்வுக்காகவும், அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவரது பெருந்தன்மை என்னை உருக வைத்தது.
அவரை திருமணம் செய்தால் என்ன என்று தோன்றியது. பெரும் போராட்டத்துக்கு பின், பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்காக கணவர் தொடங்கிய இந்த, 'அமர் சேவா' சங்கம் தான் என் குடும்பம். 35 ஏக்கர் வளாகத்தில் சின்ன கிராமமாகவே இயங்குகிறது. இதில், சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி, சிகிச்சை மையம், தொழிற்பயிற்சி விடுதி என அனைத்தும் உண்டு.
நம் பிள்ளைகள் வளாகத்துக்குள்ளேயே முடங்கக் கூடாது; அவர்களுக்கான வெளியுலகக் கல்வி, 'ஆன்லைன்' படிப்பு, வேலைவாய்ப்பு என எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உள்ளூர் ஐ.டி.ஐ., முதல் அமெரிக்க பல்கலைக்கழகம் வரை, எல்லா கதவுகளையும் தட்டுகிறேன்.
மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலும், கல்வி, விளையாட்டு என உயர்ந்து, தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு, அவர்கள் வளர்வதை பார்க்கும்போது, மனம் நிறைகிறது.
நாங்கள் துவங்கியுள்ள, 'அமர் பாரா' விளையாட்டு பள்ளி மூலம், மாற்றுத்திறனாளி குழந்தைகள், இளைஞர்களின் விளையாட்டுக் கனவுகளுக்கு சிறகுகள் கொடுக்கிறோம்.
சக்கர நாற்காலி கூடைப்பந்து, பாரா தடகளம், உட்கார்ந்தபடியே வாலிபால், சக்கர நாற்காலி கிரிக்கெட் என, சர்வதேச தரத்தில் பயிற்சி முகாம் நடத்துகிறோம்.
தேசிய பயிற்சியாளர்கள், ஊட்டச்சத்து உணவு, உளவியல் ஆதரவு என, எல்லாவற்றையும் ஒரே கூரையின் கீழ் கொடுக்கிறோம். 2004ம் ஆண்டு முதல், எங்கள் இல்லக் குழந்தைகள், மாநில அளவில் பரிசுகள் பெறுவதுடன், கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை மற்றும் பெங்களூரு மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்கின்றனர்.
'பரிதாபம் வேண்டாம்... வாய்ப்பு கொடுங்கள்; பதக்கம் கொண்டு வருவோம்' என்பது தான், எங்கள் குழந்தைகளின் முழக்கம். வரும் 2028 உலக மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகளில், 'அமர் சேவா' சங்க மாணவர் ஒருவர், இந்தியக் கொடி ஏந்த வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு!
