PUBLISHED ON : மார் 20, 2026 12:27 AM

திருப்பத்துார் மாவட்டம், வீரமுஸ்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரீத்தா: என் அப்பா பெயின்டர். உடல்நிலை சரியில்லாத நாட்களில் கூட வேலைக்கு செல்வார். அப்பாவின் அந்த உழைப்பும், பெயின்ட் வடிந்து, காய்ந்து போன கைகளையும் பார்க்கும்போது, நன்றாக படித்து வேலைக்கு சென்று, அப்பாவை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்படும். இப்போது அது நிஜமாகி இருக்கிறது.
நான், அக்கா, தம்பி எல்லாரும் அரசு பள்ளியில் படித்தோம். அப்பாவின் வருமானத்தில் தான், குடும்பம் நடந்தது.
'மூன்று பேரும் நன்கு படித்து, நல்ல வேலைக்கு போக வேண்டும்' என்று அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார். நான் கல்லுாரியில் சேர்ந்த போது, ஒவ்வொரு முறை கட்டணம் கட்டும் போதும், அவ்வளவு சிரமமாக இருக்கும்.
அப்பா, ஒரு நாளைக்கு பல இடங்களுக்கு வேலைக்கு செல்வார். சம்பாதித்த பணம் எல்லாம், எங்கள் படிப்புக்கே செலவாகி விடும். போதாக்குறைக்கு நிறைய கடன்கள் இருந்தன.
நான் இளங்கலை இயற்பியல் படித்து முடித்தேன். படித்து முடித்ததும், வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் இயங்கும், 'ஓலா பியூச்சர்' தொழிற்சாலையில், உற்பத்தி பிரிவில் வேலை கிடைத்தது.
நான் வேலையில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. முதல் மாத சம்பளம் வாங்கிய போது தீபாவளி வந் தது. என் வருமானத்தை இரண்டாக பிரித்து பெற்றோர் கையில் கொடுத்து, 'குடும்பத்துக் காக இல்லாமல், உங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினேன்.
பொதுவாக, கொஞ்சம் பணம் கையில் இருந்தால், எந்தக் கடனை அடைக்கலாம் என்றுதான் யோசிப்பார் அம்மா. ஆனால், முதல் முறையாக தனக்கு என்ன வாங்கணும் என்று யோசித்து பார்த்ததை கண்டபோது, அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
அக்காவும் ஒரு பள்ளியில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். அவளுக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்தோம். என் வருமானத்தில் முழு கடனையும் அடைத்தேன்.
வீட்டுக்கு தேவையான பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கினேன். எனக்கும் சம்பளம் அதிகரித்தது. என் திருமண செலவுகளுக்கு, அப்பாவை சிரமப்படுத்துவதில் விருப்பம் இல்லை; அதனால் பணத்தை சேமித்து நகைகள் வாங்கினேன்.
இப்போது என் தம்பியை படிக்க வைக்கிறேன். ஒரு காலத்தில், எங்கள் அப்பாவை பார்த்து, தேவையில்லாத கேள்விகள் கேட்டோரெல்லாம், இப்போது, 'பெண் பிள்ளைகளை எப்படி தைரியமா வளர்த்திருக்கான் பாரு' என்று பொறாமையாக பேசுகின்றனர்.
படிப்பும், அது கொடுக்கும் தன்னம்பிக்கையும் வேறு எதுவும் தராது. யார் என்ன சொன்னாலும், பிள்ளைகளை படிக்க வைத்தால் மட்டும் போதும்; மற்றதை எல் லாம் அவர்கள் பார்த்துக் கொள்வர்.
