PUBLISHED ON : மே 07, 2026 01:56 AM

அரச இலையில் ஓவியம் வரைந்து வருமானம் ஈட்டும், செங்கல்பட்டு மாவட்டம், சந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த, எம்.பி.ஏ., மாணவரான கார்த்திக்:
சிறு வயது முதலே, ஓவிய கலை மீது ஆர்வம் உண்டு. வழக்கமான ஓவியமாக இல்லாமல், அதில் நமக்கென தனித்துவம் வேண்டும் என்று முடிவு செய்தேன். இலைகளில் ஓவியம் வரையலாம் என்று தோன்றியது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, அரச மரத்தின் இலையில் ஓவியங்கள் வரைகிறேன். புதிதாக ஒரு வேலையை செய்யும் திருப்தியும், மகிழ்ச்சியும் இருக்கிறது.
கல்லுாரி நாட்களிலேயே ஓவிய வகுப்புகளுக்கு சென்று, முறைப்படி கற்றுக் கொண்டேன். அடிப்படை திறன்களை வளர்த்துக் கொண்டபோது, உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைத்தது.
இலை ஓவியத்தை, பல பிரபலங்களுக்கு கொடுத்திருக்கிறேன்; அதன் வாயிலாக வருமானமும் ஈட்டி வருகிறேன். இதற்கு நண்பர்களின் ஆதரவு, மிகவும் முக்கியமானதாகவும், ஆதாரமாகவும் அமைந்துள்ளது.
இலையில் ஒரு படம் வரைவதற்கு, மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும்; அவ்வளவு நுட்பமான வேலைகள் இருக்கின்றன.
முதலில், இலையின் மீது பேனாவால் உருவத்தை வரைந்து, பின், பேனா கத்தி உதவியுடன், அந்த உருவத்தை நுணுக்கமாக வெட்டி எடுப்பேன். அப்படித்தான் பல ஓவியங்களை உருவாக்கி வருகிறேன். இதுவரை நுாற்றுக்கும் மேற்பட்ட இலை ஓவியங்களை உருவாக்கிஉள்ளேன்.
இலை ஓவியம் வேண்டும் என்று, பல ஆர்டர்கள் வருகின்றன. பிரபலங்களின் உருவங்களை இலைகளில் வடிவமைத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளேன். ஒரு ஆர்டருக்கு, 700 முதல் 1,000 ரூபாய் வரை வாங்குகிறேன். மாதத்திற்கு, 20 ஆர்டர்கள் வரை செய்து கொடுப்பேன்.
கலை ஆர்வம், என் படிப்பை பாதித்து விடக்கூடாது என்பதில், மிக தெளிவாக இருக்கிறேன். படிப்பு தான் ஆணிவேர். எனக்கு அரசுப் பணி செய்ய வேண்டும் என்பதே, எதிர்கால விருப்பம். அப்படியே இந்த கலை படைப் பையும் தொடர்வேன்!

