/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சாப்பிடவும் துாங்கவும் தான் வீட்டிற்கு செல்வேன்!
/
சாப்பிடவும் துாங்கவும் தான் வீட்டிற்கு செல்வேன்!
PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

கால்நடைகள் வளர்ப்பு வாயிலாக மன நிம்மதியுடன், நிறைவான லாபமும் கிடைப்பதாக கூறும், நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பனையங் குறிச்சியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்: எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, தனியார் பொறியியல் கல்லுாரி ஒன்றில் உதவி பேராசிரியராக எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். குறைவான ஊதியம்; பணிச்சுமை அதிகம்.
மன உளைச்சலுக்கு ஆளானதால், அப்பணியை விட்டு, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு, விவசாயமும் செய்ய முடிவெடுத்தேன்.
எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான பண்ணையின் மொத்த பரப்பு, 15 ஏக்கர். இதில், 2 ஏக்கரில் கோழி, ஆடு, மாடு கொட்டகைகள் இருக்கின்றன.
மேலும் வேம்பு, நுணா, மா, தென்னை உள்ளிட்ட மரங்கள் இருப்பதால், நிழல் கிடைப்பதுடன், சில்லென்ற காற்று எப்போதும் வீசும்.
இது, கால்நடைகளுக்கு உகந்த சூழலாக அமைந்து விட்டது. மேலும், 2 ஏக்கரில் கால்நடைகளுக்கான பசுந்தீவனம் சாகுபடி; 1 ஏக்கரில் மேய்ச்சல் நிலம்; மீதி 10 ஏக்கரில், ஒரு போகம் மட்டும் நெல் சாகுபடி செய்கிறேன்.
கால்நடை கழிவுகளை விவசாயத்திற்கு அடியுரமாக பயன்படுத்துவதால், ரசாயன உரங்களுக்கான செலவு, 50 சதவீதம் குறைகிறது.
நெல் சாகுபடியில் கிடைக்கும் வைக்கோல் மாடுகளுக்கு தீவனம். அது இல்லாத சமயங்களில், 10 ஏக்கர் வயலில் மேய்ச்சலுக்கு விடுவேன்.
மேலும், 60 செம்மறி ஆடுகள் வளர்க்கிறேன். விற்பனை வாய்ப்பை பொறுத்தவரை பெட்டைகளை விட, கிடாக்களுக்கு தான் அதிக வரவேற்பு இருக்கிறது. அதனால், கிடாக்களை மட்டுமே வளர்க்கிறேன்.
பக்ரீத் சமயத்தில் விற்பனை செய்தால் ஒரு கிடாவிற்கு 11,000 ரூபாய் வரை விலை கிடைக்கும். செம்மறி ஆடு வளர்ப்பு வாயிலாக, மாதத்திற்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
எப்போதும், 10 மாடுகள் கறவையில் இருக்கும். தினமும் 100 லிட்டர் வீதம், மாதம் 3,000 லிட்டர் பால் விற்பனை வாயிலாக, மாதத்திற்கு 1.14 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குது.
அடர்தீவனம், பணியாளர்களுக்கான சம்பளம் உட்பட எல்லா செலவுகளும் போக, 35,000 ரூபாய் லாபம் வரும்.
நாட்டுக்கோழிகள், செம்மறி ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு வாயிலாக மாதத்திற்கு, 80,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
இது தவிர, நெல் சாகுபடி வாயிலாகவும் லாபம் கிடைத்து வருகிறது. சாப்பிடவும், துாங்கவும் தான் வீட்டிற்கு செல்வேன். மற்ற நேரங்களில் பண்ணையில் தான் இருப்பேன்.
தொடர்புக்கு
87540 37900

