/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஒருங்கிணைந்த பண்ணை நடத்தும் பட்டதாரி!
/
ஒருங்கிணைந்த பண்ணை நடத்தும் பட்டதாரி!
PUBLISHED ON : மார் 17, 2026 02:14 AM

'காப்பியம்' என்ற பெயரில், இயற்கை வேளாண் பண்ணையை நடத்தி வரும், கோவை மாவட்டம், குப்பனுார் கிராமத்தைச் சேர்ந்த, 36 வயதான விஜயன்: எங்கள் வீட்டில், நான் தான் முதல் தலைமுறை பட்டதாரி. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்ததுடன், 'வெல்டிங்' தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்றேன். ஸ்வீடன், ஜெர்மனி, இந்தோனேஷியா, சூடான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று பணியாற்றி உள்ளேன்.
ஒரு கட்டத்தில், வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயத்தில் இறங்க திட்டமிட்டேன். விவசாய பணிகளில் ஏற்கனவே அனுபவம் உண்டு.
கல்லுாரி படிப்பு முடிக்கிற வரைக்கும், சேலத்தில் உள்ள எங்கள் குடும்ப நிலத்தில் வேலை பார்த்திருக்கிறேன்.
காய்கறிகளை அறுவடை செய்து, அடுத்த அரைமணி நேரத்திற்குள் கோவை மாநகர பகுதியில் கொண்டு போய் சேர்க்கும் வகையில் நிலம் கிடைத்தால் வசதியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு, அதற்கான தேடல்களில் இறங்கினேன்.
நான் எதிர்பார்த்தது மாதிரி, இந்த ஊரில், 20 ஏக்கர் கிடைத்தது. ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு, 50,000 ரூபாய் வீதம் குத்தகை பணம் கொடுத்து வருகிறேன்.
இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த, 500 சதுர அடி ஓட்டு வீட்டில் நான், என் மனைவி மற்றும் இரண்டு மகள்களும் வசிக்கிறோம்.
இங்கு, 10 ஏக்கர் பரப்பில் பலவிதமான காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் சாகுபடி செய்கிறேன். 3 ஏக்கரில் செவ்வாழை, 2 ஏக்கரில் பப்பாளி பயிரிடுகிறேன்.
திறந்தவெளி கிணற்றில் இருந்து மோட்டார் வாயிலாக தண்ணீர் எடுத்து, தொட்டியில் சேமித்து பாசனம் செய்கிறேன். 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில், ஆண்டுக்கு 1,000 நாட்டு வவ்வால் மீன்களையும் வளர்த்து வருகிறேன்.
தவிர, 30 நாட்டுக்கோழிகள் மற்றும் 10 வாத்துகளும் வளர்க்கிறேன். 20 தேனீ பெட்டிகள் அமைத்து, தேன் விற்பனை வாயிலாக கணிசமான லாபம் பார்த்து வருகிறேன்.
நான் உற்பத்தி செய்யும் காய்கறிகள் மற்றும் பழங்களை, நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே முதன்மையான நோக்கம்.
'ஆர்டர்' அடிப்படையில், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக வினியோகம் செய்கிறேன்; ஒருசில இயற்கை அங்காடிகளுக்கும் என் விளைபொருட்களை விற்பனை செய்து வருகிறேன்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக, சமூக வலைதள குழு அமைத்திருக்கிறேன்.
என் பண்ணையில், 13 பேர் நிரந்தரமாக தங்கி வேலை பார்க்கின்றனர். காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் விற்பனை வாயிலாக, ஆண்டுக்கு சராசரியாக, 60 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எல்லா செலவுகளும் போக, 20 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தொடர்புக்கு
90038 89666

