PUBLISHED ON : ஏப் 06, 2026 03:21 AM

கரடி பொம்மை வேடம் போடுவதன் வாயிலாக, மற்றவர்களை மகிழ்விக்கும் சேவையை செய்து வரும், சென்னை சாந்தோமைச் சேர்ந்த அபினாஷ் ஹோம்ஸ்:
சென்னை, சாந்தோமில் உள்ள குடிசை பகுதியில் தான் எங்கள் வீடு இருக்கிறது. அப்பா இல்லை; அம்மா, பாட்டி வீட்டில் தான் இருக்காங்க. நான் சித்தி வீட்டில் இருந்து படிக்கிறேன்.
'நன்கு படிக்க வேண்டும்; பெரிய ஆளாக வர வேண்டும்' என்று வீட்டில் அனைவருக்குமே ஆசை. கவனமாக படித்து பிளஸ் 2 முடித்தேன்.
கல்லுாரியில் இடம் கிடைத்தது; ஆனால், கல்லுாரி கட்டணம் கட்ட பணமில்லை. சித்தி, தான் அணிந்திருந்த நகையை அடகு வைத்து தான், என் னை கல்லுாரிக்கு அனுப்பினார்.
பெரிய நிகழ்ச்சிகள், புதிதாக கடை திறப்பு விழா போன்ற இடங்களில் கரடி பொம்மைகள் நிற்கும்; அங்கு வருவோரை சந்தோஷப்படுத்துற மாதிரியான சேட்டைகளையும் செய்யும்.
அது, குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த மாதிரி, கரடி பொம்மை வேடம் போட்டு, மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். முதல் முதலாக நான் கரடி வேடம் போட்ட போது, பலரையும் என்னால் சிரிக்க வைக்க முடிந்தது.
அந்த அனுபவம் பிடித்ததால், முதியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்ல ஆரம்பித்தேன்.
அங்கு, அவர்களிடம் எனக்கு கிடைத்த வரவேற்பு, மிகவும் திருப்தியாக இருந்தது. ஒரு பாட்டி, என்னை, கண்ணீர் மல்க ஆசீர்வாதம் செய்தார்.
இன்னொரு இடத்தில், ஒரு குட்டிப் பையன் கன்னத்தில் முத்தம் கொடுத்து, நன்றி சொல்லி சென்றான். இது போன்ற நெகிழ்வான தருணங்கள் தான், என்னை, மீண்டும் மீண்டும் கரடி வேடம் போட வைக்கிறது.
இதற்காக எவரிடமும் எந்த கட்டணமும் வாங்குவதில்லை; போக்குவரத்து செலவுக்கான பணம் மட்டுமே வாங்குவேன். கரடி வேடத்திற்கான உடையையும் நானே சொந்தமாக வாங்கி விட்டேன்.
படிப்பு தான் முதலில்... மற்ற வேலைகள் அனைத்தும் அதன் பின் தான். அதனால், படிப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன்.
நான் நன்கு படிப்பதில் என் முன்னேற்றம் மட்டுமில்லை; குடும்பத்தின் முன்னேற்றமும் இருக்கிறது என்று தெரியும்.
சினிமா மிகவும் பிடிக்கும். சினிமாவில் எல்லா வித்தைகளும் தெரிந்த, சகலகலா வல்லவன் என்ற பெயர் வாங்க வேண்டும். அதற்காக நிறைய கற்றும், பயிற்சி எடுத்தும் வருகிறேன்; குறும்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறேன்!
