'மருத்துவம் என்பது மருந்து மட்டுமல்ல மனிதநேயமும் கூட!'
'மருத்துவம் என்பது மருந்து மட்டுமல்ல மனிதநேயமும் கூட!'
PUBLISHED ON : செப் 12, 2026 02:42 AM

'டாக்டர்ஸ் நெட்' என்ற அமைப்பு வாயிலாக கிராமப்புறங்கள், மலைப்பகுதிகளில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வரும், கோவையைச் சேர்ந்த, அரவிந்தன் - அபிராமி தம்பதி:
அபிராமி: நாங்கள் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் இல்லை. நான், 'பயோடெக்' பட்டதாரி. கணவர் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தார். 2012ல் கோவை மாவட்டம், உப்பிலிபாளையம் பகுதியில் குடியேறினோம். நான், சேவை அமைப்பு ஒன்றில் தன்னார்வலராக பணியாற்றியபோது, பல நோயாளிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது தான், கிராமப்புறங்களில் இருப்போருக்கு நம்பகமான மருத்துவ ஆலோசனை, சிகிச்சை தொடர்பான தகவல், யாரை எப்படி அணுகுவது, மருத்துவர்களின் பரிவுணர்வு கிடைப்பதில் பெரும் இடைவெளி இருப்பது தெரிந்தது.
இதனால், சுகாதார சமத்துவத்தை ஏற்படுத்த கிராமப்புறங்கள், மலை கிராமங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தோம். ஏற்கனவே செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகள், மக்கள் நல அமைப்புகள், பழங்குடியினர் நல மருத்துவமனைகளுடன் தொடர்பை ஏற்படுத்தினோம்.
தற்போது எங்களிடம், 25 தன்னார்வலர்கள் உள்ளனர். எங்களிடம் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை முழுமையாக முடியும் வரை, தன்னார்வலர் ஒருவர் பொறுப்பேற்று, மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ காப்பீடு வாயிலாக சிகிச்சை பெறுதல், குறைந்த செலவில் தரமான மருத்துவம் பெறுதல் போன்றவற்றுக்கு வழிகாட்டுவார்.
மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளின் சிகிச்சைக்கு நிதியுதவியும் செய்கிறோம்.
அரவிந்தன்: சேவை மனநிலையில் இருக்கும் 600 மருத்துவர்கள், எங்களுடன் இணைந்துள்ளனர். நாங்கள் இதுவரை, 4,500க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனையும், சிகிச்சைகளுக்கான உதவியும், 100 அறுவை சிகிச்சைகள் செய்ய உதவியும் செய்திருக்கிறோம்.
மருத்துவமனைகளிடம் பேசி, சிகிச்சை கட்டணத்தில் மொத்தம் 1 கோடி ரூபாய் தள்ளுபடி வாங்கி கொடுத்திருக்கிறோம். சிகிச்சைக்கு பின், தேவைப்படுவோருக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்திருக்கிறோம்.
நீண்ட நாள் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பரஸ்பர உதவிக்குழுக்களை அமைத்து, வாழ்வாதார ஆலோசனைகளை பெறவும் உதவி வருகிறோம். நோயாளிகளாக இருந்து மீண்ட பலரும், எங்களுடன் தன்னார்வலர்களாக பணியாற்றுவது, எங்கள் செயல்பாடுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.
சமூக ஆரோக்கியத்துக்கு தடையாக இருக்கும் காரணிகளை கண்டறிந்து, அவற்றை போக்க எங்களாலான பணிகளை செய்து வருகிறோம். மருத்துவம் என்பது மருந்து மட்டுமல்ல; மனிதநேயமும் கூட!
