PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM

சென்னையில் பள்ளி தாளாளராக இருந்தாலும் , சொந்த ஊரில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள, தென்காசி மாவட்டம், வாசுதேவ நல்லுாரை சேர்ந்த, 54 வயதான சுந்தர்: வாசுதேவநல்லுார் அருகேயு ள்ள கூடலுார் தான், என் சொந்த கிராமம். என் அப்பா, ராணுவத்தில் வேலை பார்த்தார்; அம்மா தான் விவசாயத்தை கவனித்துக் கொண்டார். அவர்தான் எனக்கு விவசாய நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார்.
வாசுதேவநல்லுார் தனியார் சர்க்கரை ஆலையில் பதிவு செய்து, கரும்பு சாகுபடியில் இறங்கினோம். 86 டன் கரும்பு மகசூல் எடுத்து, 'சிறந்த விவசாயி' என்ற சான்றிதழ் வாங்கினேன். அதனால் , விவசாயத்தில் ஆர்வம் அதிகரித்தது.
ஆனால், என்னை நன்கு படிக்க வைத்து, வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று அம்மாவுக்கு ஆசை. அதனால், சட்டம் படித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் வக்கீலாக பயிற்சி செய்தேன்.
திருமணத்திற்கு பின், என் வாழ்வில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.
சென்னை, புழுதிவாக்கத்தில் வியாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை நடத்தி வந்த என் மாமியார், பள்ளியின் நிர்வாக பொறுப்பை, என்னிடம் ஒப்படைத்தார். கல்வி சார்ந்த பணி என்பதால், பி.எட்., படிப்பை முடித்து, பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.
வாசுதேவநல்லுாரிலும், பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை துவக்கினோம். ஆனாலும், விவசாயத்தில் இருந்த ஆர்வம் குறையாததால், 2000வது ஆண்டு முதல், கூடலுாரில் நிலங்கள் வாங்கி விவசாயம் செய்தேன். 2018ல், இயற்கை விவசாயத்துக்கு மாறினேன்.
என் விவசாய பண்ணையின் மொத்த பரப்பு, 80 ஏக்கர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை இரவு கிளம்பி, பண்ணைக்கு வந்து விடுவேன். 25 ஏக்கரில் கரும்பு சாகுபடி வாயிலாக, ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தவிர, 20 ஏக்கரில் இயற்கை வீரிய ரக நெல் சாகுபடி செய்கிறேன்; அதில், 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது. 600 தென்னை மரங்களில் இருந்து ஆண்டுக்கு, 60,000 தேங்காய்கள் கிடைக்கின்றன; அவற்றை விற்பனை செய்வதில், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
மேலும், 6 ஏக்கரில் இருக்கும் எலுமிச்சை மரங்களில் இருந்து, ஓராண்டுக்கு சராசரியாக, 18,000 கிலோ எலுமிச்சை பழங்கள் விற்பனை செய்வதில், 4 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். 20 மாடுகள் வளர்ப்பதன் வாயிலாக, மாதத்திற்கு 900 லிட்டர் பால் கிடைக்கிறது; இதில், ஆண்டுக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
இப்போதைக்கு, 80 ஏக்கரில் விவசாயம் வாயிலாக, ஓராண்டுக்கு 31.50 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்து வருகிறது.
தொடர்புக்கு 94440 35465
