PUBLISHED ON : ஆக 10, 2019 12:00 AM

நஞ்சுக்கொடி இறக்கம் தொடர்பாக கூறும், மகப்பேறு மருத்துவர் கவுரி மீனா: தாய்க்கும், கர்ப்பப்பையில் வளரும் சேய்க்கும் இடையேயான இணைப்பு, நஞ்சுக் கொடி. கர்ப்ப காலத்தின் போது, கர்ப்பப்பையின் உட்சுவரிலிருந்து உருவாகும் இது, குழந்தையின் தொப்புளுடன் இணைந்திருக்கும். கருவுக்கு, ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்கும் இந்தக் கொடி, கருவின் ரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றும் பணியையும் செய்யும். ஒரு பெண் கருவுற்றவுடன், கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில் உருவாகும் இந்த நஞ்சுக்கொடி, ஏழாவது மாதத்துக்கு பின், மேல் சுவரை நோக்கி நகர வேண்டும்.
அப்போது தான் பிரசவத்தின்போது குழந்தை வெளி வர வழி கிடைக்கும். அப்படியில்லாமல், கர்ப்பப்பையின் கீழ், ஜனன வாயை அடைத்தபடி கொடி இருப்பதை தான், 'நஞ்சுக்கொடி இறக்கம்' என்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்ட சிசேரியன் பிரசவம்; அதிக முறை, 'டி அண்ட் சி' செய்தது; தாய்க்கு ரத்தச்சோகை; இரட்டை குழந்தை கர்ப்பம்; சிசுவின் எடை, 3.5 கிலோவுக்கும் அதிகமாக இருப்பது; 40 வயதுக்கு மேல் கருவுறுவது போன்றவை, நஞ்சுக்கொடி இறக்கத்திற்கான காரணங்களாகும். நஞ்சுக்கொடி இறக்கம் ஏற்படுவோருக்கு, சிசேரியன் பிரசவம் தான் வழி. குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதுடன், இதனால், குழந்தை வெளியே வருவதில் தடை ஏற்படும்.
சில கர்ப்பிணிகளுக்கு, பிரசவ வலி ஏற்படாமலேயே அதிக உதிரப்போக்கு உண்டாகும். சிலருக்கு உடலிலுள்ள மொத்த ரத்தமும் கூட வெளியேறும் சூழல் உருவாகலாம். குழந்தைக்கு ரத்த ஓட்ட பாதிப்பு, மூச்சுத்திணறலும் ஏற்படலாம். ஏழாவது மாதம், 'ஸ்கேன்' எடுக்கும் போதே, கர்ப்பப்பையில் நஞ்சுக் கொடி எங்கே இருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்து விடுவர். நஞ்சுக்கொடி கீழிறங்கி இருந்தால், மருத்துவர் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், ஏழாவது மாதத்தின் தொடக்கத்திலேயே கர்ப்பிணிகள், குழந்தையின் நுரையீரல், உடல் உறுப்பு வளர்ச்சிக்கு உரிய ஊசிகளைப் போட்டுக் கொள்ளலாம். தாம்பத்யத்தை அவசியம் தவிர்க்க வேண்டும்.
பிரசவத்தின் போது அதிக ரத்தம் வெளியேறும் வாய்ப்புள்ளதால், அவசர சூழலைச் சமாளிக்க ரத்த வங்கி, கூடுதல் மருத்துவர்கள், 'யூராலஜிஸ்ட்' மற்றும் பச்சிளம் குழந்தைநல மருத்துவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனையில் கர்ப்பிணியை சேர்ப்பது நல்லது. பயணங்கள், உடற்பயிற்சிகள், கடினமான வேலைகள் போன்றவற்றை, கர்ப்பிணிகள் அவசியம் தவிர்க்க வேண்டும்.

