PUBLISHED ON : ஆக 11, 2019 12:00 AM

சிறுநீரின் துர்நாற்றத்திற்கான காரணம், அதற்கான தீர்வுகளை கூறும், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் எம்.ஜி.சேகர்: சிறுநீரக கோளாறு மட்டுமின்றி, பல்வேறு நோய்களை அடையாளம் காட்டும் அறிகுறியாக, சிறுநீர் துர்நாற்றம் உள்ளது.
எனவே, இந்தப் பிரச்னையை அலட்சியப்படுத்தக் கூடாது.டீ, காபியில் உள்ள, 'காபைன்' எனும் வேதிப்பொருள், சிறுநீர் பெருக்கியாகச் செயல்படக்கூடியது. அதிகமாக டீ, காபி அருந்தும் போது உடலிலுள்ள நீர், சிறுநீராக வெளியேறுவதால் மிக எளிதாக, 'டீஹைட்ரேஷன்' எனப்படும், நீர் வறட்சி நிலை ஏற்பட்டு விடும்.அப்போது, போதுமான அளவு நீர் அருந்தாவிட்டால் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதேபோல, மது அருந்துவதும் கூட, நீர் வறட்சி நிலையை ஏற்படுத்தும். எனவே, டீ, காபி அருந்துவதை குறைப்பதுடன், மது அருந்தும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.நம் உடலில் சேரும் கழிவுகளை அகற்றும் பணியை, சிறுநீரகங்கள் செய்கின்றன. அதற்கு, போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். போதிய அளவு தண்ணீர் அருந்தாத நிலையில், கழிவுகளை முழுமையாக அகற்ற முடியாமல் போவதால், நீர் வறட்சி நிலை ஏற்படும். வெளியேறும் சிறுநீர், அதிக அடர்த்தியுடனும், நிறம் மாறியும் காணப்படும்; துர்நாற்றம் வீசும். போதுமான அளவு நீர் அருந்துவதே, இதற்கான முதல் சிகிச்சை.சிறுநீரகம், சிறுநீர்ப் பாதை, சிறுநீர்ப்பை என, எந்த இடத்திலும், பாக்டீரியா தொற்று ஏற்படலாம். அப்படி பாக்டீரியா தொற்று ஏற்படும் சூழலில், துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேற வாய்ப்பிருக்கிறது. எனவே, சிறுநீர் பரிசோதனை செய்து, எந்த வகையான கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிவது அவசியம்.சிறுநீரில் அதிகமாக - துர்நாற்றம் வீசினால், சிறுநீரகக் கற்கள் பிரச்னை இருக்கக் கூடும். அடிவயிற்று வலியோடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடன் வெளியானால், 'அல்ட்ராசவுண்டு' பரிசோதனை செய்யலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லையென்றால், சிறுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். ஒருவருக்கு, சர்க்கரை நோய் இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகவும், சிறுநீரில் துர்நாற்றம் வீசலாம். அதாவது, கல்லீரலில், 'கீட்டோன்'களின் அளவு அதிகரிப்பதால், அது, சிறுநீரில் துர்நாற்றத்தை உண்டாக்கும்.சிறுநீரில் நைட்ரேட், பாஸ்பேட் போன்ற நுண்சத்துகள் அதிகமாக இருந்தாலும், சிறுநீரின் நிறம் மாறும்; துர்நாற்றம் வீசும். மிக அரிதாக, வெங்காயம், பூண்டு போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வதாலும் கூட, சிறுநீரில் ஒருவித நெடி ஏற்படலாம். எனவே, உணவுப் பழக்கத்தில் கவனம் தேவை.
