புதன், சனியில் எண்ணெய் தேய்த்து ஆண்கள் குளிக்கணும்!
புதன், சனியில் எண்ணெய் தேய்த்து ஆண்கள் குளிக்கணும்!
PUBLISHED ON : அக் 27, 2019 12:00 AM

புதன், சனியில் எண்ணெய் தேய்த்துஆண்கள் குளிக்கணும்!
எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள்; எப்படி தேய்த்து குளிக்க வேண்டும்; குளித்த பின் என்ன செய்யக் கூடாது என்பது பற்றி, இயற்கை மருத்துவர் எஸ்.இந்திரா தேவி: நான்கு நாட்களுக்கு ஒரு முறை, தலை முதல் கால் வரை, எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உடலில் தேய்த்து குளிக்கலாம். எண்ணெய் தேய்த்து குளித்தால், சளித் தொந்தரவு ஏற்படும் என எண்ணுவோர், எண்ணெயில் மிளகு, பூண்டு, சுக்கு, சீரகம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி, வடிகட்டி தேய்க்கலாம். எண்ணெய் தேய்ப்பதை, முதலில் உச்சந்தலையில் இருந்து துவங்க வேண்டும்; உள்ளங்காலில் முடிக்க வேண்டும். குறிப்பாக, கண்கள், நாசி துவாரங்கள், காது, வாய், தொப்புள், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்புகளில், எண்ணெய் நன்றாக படும்படி தேய்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்ததும், உடனே குளிக்கக் கூடாது. 10 முதல், 30 நிமிடங்கள் வரை ஊறிய பின், மிதமான சுடுநீரில், சிகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். அவ்வாறு குளிப்பதை, காலை, 7:30 மணிக்குள் முடித்து விட வேண்டும்.புதன் மற்றும் சனிக் கிழமைகளில் ஆண்களும், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால், உடல் சருமத்தின் மேற்பரப்பில் வாழும், கண்ணுக்குத் தெரியாத நோய் அணுக்கள், பிராண வாயு கிடைக்காமல் இறந்து விடுகின்றன. இதனால், உடலில் நோய் தொற்றுவதில்லை. கண், மூக்கு, காது, நாக்கு, வாய் ஆகியவற்றில் பலமும், தெளிவும் கிடைக்கும்; உடலுக்கு வலிமை கிடைக்கும்.தலையில் ரோம வளர்ச்சி அதிகரிக்கும்; ஆயுள் விருத்தி அடையும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நாற்றம் மறைந்து, மணம் கிடைக்கும். சருமத்தின் ஈரத்தன்மை பராமரிக்கப்படும். உயர் ரத்த அழுத்த நோய்கள் குணமாகும்.எண்ணெய் குளியல் நல்லது தான் என்றாலும், மழைக்காலங்களில், மாலை, 6:00 மணிக்கு மேல்; காய்ச்சலின் போது; விரத நாட்களில்; மாதவிடாய் காலங்களில்; உடலுக்கு சுகம் இல்லாத நாட்களில் குளிக்கக் கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாட்களில், பகலில் உறக்கம் கூடாது. மது, மாமிசம், ஐஸ்கிரீம், இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கொத்தவரை, மொச்சை, நீர் காய்கறிகளை உண்ணக் கூடாது. அந்த நாட்களில், உடலுறவை தவிர்க்க வேண்டும்!
என் மகள் கீர்த்தி பிறவி நடிகை!
தன் மகள் பற்றி, தேசிய விருது பெற்ற, இளம் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய், முன்னாள் நடிகை மேனகா: ரஜினிகாந்த் நடித்த, நெற்றிக்கண் படத்தின் நாயகிகளில் ஒருவராக நான் நடித்துள்ளேன். 'ராமனின் மோகனம்' என்ற பாடல், என்னை உங்களுக்கு நினைவூட்டும்.நான் சென்னை பொண்ணு. அப்பாவும், அம்மாவும் ஆசிரியர்கள். சென்னை பெரம்பூர் பள்ளியில் தான், இருவரும் வேலை பார்த்தனர்.எங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும், எந்த சினிமா தொடர்பும் கிடையாது. என்னோட உண்மையான பெயர், பத்மாவதி. சினிமாவுக்காக, மேனகா என, மாற்றப்பட்டேன். ராமாயி வயசுக்கு வந்துட்டா என்ற படம் தான் முதல் படம்.என் கணவர் பெயர் சுரேஷ். மலையாள சினிமாவில் பெரிய தயாரிப்பாளர். சூப்பர் ஸ்டார் மோகன்லால், இயக்குனர் பிரியதர்ஷன், என் கணவர் எல்லாம் ஒன்றாக படித்த, கிளாஸ்மேட்ஸ்! 1983ல், பூச்சக்கொரு மூக்குத்தி என்ற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தான், சுரேஷை சந்தித்தேன். அப்போதே அவருக்கு என்னை பிடித்து விட்டது. எனினும், 1987ல் தான் திருமணம் செய்தோம்.எங்களுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள், ரேவதி; பரத நாட்டிய டான்சர். இளையவள் தான், நடிகை கீர்த்தி சுரேஷ். மூத்தவளுக்கு திருமணம் ஆகி விட்டது. இயக்குனர் பிரியதர்ஷனிடம், உதவி இயக்குனராக இருக்கிறாள். நடிப்பதில் அவளுக்கு ஆர்வம் கிடையாது.கீர்த்திக்கு, எப்பவுமே நான் நடிப்பு பற்றி சொல்லிக் கொடுப்பது இல்லை. பிறவியிலேயே அவள், சிறந்த நடிகை. எனினும், அவளுக்கு நான் சில அறிவுரைகள் கூறியுள்ளேன். 'படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு போக வேண்டும். லைட் பாயில் இருந்து அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்' என, நடிக்க வந்ததுமே சொல்லிக் கொடுத்தேன்; இன்னும் அதை அவள் பின்பற்றுகிறாள். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான, நடிகையர் திலகம் படத்தில், கீர்த்தி சிறப்பாக நடித்துள்ளாள். எதையும் சரியாக செய்ய வேண்டும் என விரும்புபவள். ஒரு மலையாள படத்தில், கண் தெரியாத பெண்ணாக நடித்தாள். அதற்காக அவள், வீட்டின் அறைகளில் விளக்குகளை அணைத்து விட்டு, குச்சி வைத்துக் கொண்டு, தட்டு தடுமாறி நடந்து பழகினாள்.இன்னொரு படத்தில், வீணை வாசிப்பது போல நடிக்க வேண்டும். அதற்காக, வீணை கற்று, உண்மையான வீணை வாத்திய கலைஞராகவே நடித்தாள். அவளுக்கு பிடித்த உணவு தோசை, கேரளா ஐட்டமான, 'தீயல்!' எல்லாவற்றையும் விட அதிகம் பிடித்தது, ஊறுகாய் தான். காரசாரமாக ஊறுகாய் கிடைத்தால், வேறு எதுவும் அவளுக்கு வேண்டாம்!
