PUBLISHED ON : மார் 30, 2021 12:00 AM

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கும் டாக்டர் சசித்ரா தாமோதரன்: 'தோர்பீகரணம்' என்ற வடமொழி சொல்லுக்கு, காதுகளை பிடித்த படி என்று பொருள்.
காதுகளை பற்றி இழுப்பதால், மூளை சுறுசுறுப்படைகிறது என்பதால், ஆதியிலிருந்தே தமிழகத்திலும், இந்தியாவிலும் சிறு தண்டனையாக இது வழங்கப்படுகிறது. ஹரியானா மாநில அரசு, தன் மாணவர்களுக்கு, 'கணேஷா உடற்பயிற்சி' என்ற பெயரில், தினமும் காலையில் தோப்புக்கரணம் போடச் செய்கிறது. தோப்புக்கரணம் செய்வதைத் தான், சில ஐரோப்பிய நாடுகள், 'சூப்பர் பிரெய்ன் யோகா' என்று கூறி, பிரபலப்படுத்தி கொண்டாடுகின்றன.முறையாக தோப்புக்கரணம் போடும் போது கால் தசைகளுக்கும், முழங்கால் மற்றும் இடுப்பு எலும்புகளுக்கும் வலிமை கிடைக்கிறது. தசைகளில் ரத்த ஓட்டம் சீரடைவதால், இதய மற்றும் ரத்த நாளங்கள் ஆரோக்கியம் அடைகின்றன. தோப்புக்கரணம் போடும் போது, மூச்சை ஆழ்ந்து இழுப்பதால், நுரையீரல்களின் செயல்பாடு அதிகரித்து, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும், அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் தோப்புக்கரணம் போடும் போது, சருமம், கண்களுக்கு நல்லதாகிறது. தோப்புக்கரணம் போடுவதால், மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனித மூளையிலிருந்து வெளிவரும் ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் தீட்டா மின் சுழற்சி அலைகளில், ஆல்பா நிலையில் மூளை சிறப்பாக செயல்படுகிறது.தோப்புக்கரணம், ஆல்பா நிலையை அதிகரிப்பதால் ஆட்டிசம், டிஸ்லெக்சியா போன்ற கற்றல் குறைபாடுகளையும் களைய உதவுகிறது. மேலும், மூளையின் பினியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் செயல்பாடுகளையும் இது அதிகரிக்கிறது. தொடர்ந்து தோப்புக்கரணம் போடும் போது, முதுமையில் ஏற்படும் மன நோய்கள் தவிர்க்கப்படுகின்றன. மேலும், மன அழுத்தம், பதற்றம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகளும் தீர்கின்றன. எப்படி முறையாக தோப்புக்கரணம் போடுவது என்பதை அறிய வேண்டும். நிமிர்ந்து நின்றபடி, இடதுகை கட்டை மற்றும் ஆள்காட்டி விரல்களால் வலது காதையும், வலது கை விரல்களால் இடது காதையும் லேசாக இழுத்தபடி கால்களை சிறிது அகலமாக வைத்தபடி, பாதங்களை நன்கு தரையில் வைத்தபடி நிற்க வேண்டும்.பின், முழங்கால்களை மடக்கி, மூச்சை நன்கு உள்வாங்கி உட்கார வேண்டும். சில நொடிகளுக்கு பின் மூச்சை வெளியிட்டவாறு எழ வேண்டும். இப்படி, 7, 14, 21 முறைகள் என, அவரவருக்கு முடிந்த எண்ணிக்கையில், தொடர்ந்து தினமும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், மேற்கூறிய நல்ல பலன் கிடைக்கும்!

