PUBLISHED ON : ஜூன் 03, 2021 12:00 AM

கொரோனா நோய் தொற்றால், மூச்சுத் திணறல் அதிகரித்து, ஆக்சிஜன் உதவியை பலர் நாடி வரும் நிலையில், இயற்கையான முறையில், எளிய யோக முத்திரை மூலம், உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க முடியும் எனக் கூறும் யோகா பயிற்சியாளர் அம்ருதா: நுரையீரலில் கழிவுகள் சேரும் போது, நுரையீரல் விரிந்து சுருங்குவதில் தடை ஏற்படும். அந்த சூழலில், அணுக்களுக்கு போக வேண்டிய ஆக்சிஜன் அளவில் தடை ஏற்படும்; அதனால் தான் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதையே உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை என்கிறோம். யோகாசனத்தில் மிகவும் எளிமையான லிங்க முத்திரையை செய்வதன் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கலாம். லிங்க முத்திரை செய்யும் போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும். அது, நுரையீரலில் தேங்கி நிற்கும் தேவையற்ற நீரை கரைத்து விடும். இதனால் நுரையீரல் சீராக இயங்க துவங்கும்; ஆக்சிஜன் பற்றாக்குறையும் நீங்கும்.இதை செய்யும் முறை மிகவும் எளிது. தரையில் இரண்டு கால்களையும் மடித்து, பத்மாசன நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் போது, முதுகு வளைந்திருக்காமல் நேராக இருக்க வேண்டும். அடுத்ததாக இரண்டு கைவிரல்களையும் ஒன்றோடு ஒன்று நன்கு கோர்த்துக் கொள்ள வேண்டும். கோர்த்த கைகளை மார்புக்கு நேராக இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும். அப்போது, இடது கை கட்டை விரலை, லிங்கம் போல மேலே துாக்க வேண்டும். அப்போது, ஒரு உள்ளங்கையால் மற்றொரு உள்ளங்கையில், 10 வினாடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.அதன்பின், இடது கை கட்டை விரலை மடக்கி, வலது கை கட்டை விரலை லிங்கம் போல மேலே துாக்க வேண்டும்.
அதன்பின், 10 வினாடிகள் உள்ளங்கைகளால், 10 வினாடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி மாறி மாறி செய்ய வேண்டும். இது தான் லிங்க முத்திரை. இதை ஒரு நாளைக்கு, 45 நிமிடங்கள் வரை செய்யலாம்; அதிகாலையில் செய்யலாம். சூரிய வெப்பம் அதிகரிக்கும் முன் செய்வது நல்லது அல்லது காலை, மதியம், இரவு என மூன்று முறை, தலா, 15 நிமிடங்கள் செய்யலாம்.எனினும் எளிதாக இருக்கிறதே என, கூடுதல் நேரம் செய்யக் கூடாது.
அப்படி செய்தால் உடலில் சோர்வு, மந்த நிலை ஏற்படும். 8 வயது குழந்தைகள் முதல், வயோதிகர்கள் வரை செய்யலாம். வயிற்றில் கட்டி, புற்றுநோய், பித்தம், அல்சர், அஜீரண கோளாறு இருப்பவர்கள் இதை செய்யக் கூடாது.பிறர், மேலே குறிப்பிட்ட வகையில் இதை செய்து வர, உடல் எடை குறையும்; புத்துணர்ச்சி அதிகரிக்கும்!
