PUBLISHED ON : அக் 19, 2022 12:00 AM

வழக்கொழிந்து போன, 500க்கும் மேற்பட்ட மரபு வழி விதைகளை சேகரித்து, பலருக்கும் இலவசமாக கொடுத்து வரும், திருப்பூரைச் சேர்ந்த பிரியா ராஜநாராயணன்:
தமிழகத்தில் ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த காய் தான், சிறகு அவரை. காலப்போக்கில் காணாமல் போன, பாரம்பரிய ரக காய்கறி விதைகளில் இதுவும் ஒன்று.
என் விதை தேடல் பயணத்தில், சிறகு அவரை விதையை கொண்டு வந்தேன். அதை நானே பயிரிட்டு மகசூல் எடுத்தேன்.
பிறகு பலருக்கும் விதையை பகிர்ந்தளித்தேன். இன்றைக்கு தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக, சிறகு அவரை காய்ச்சுக்கிட்டு இருக்கிறது.
இதை, ஆடிப்பட்டத்தில் தான் நட வேண்டும். அந்தப் பட்டத்தில் விதைத்தால் மட்டுமே காய்ப்பு இருக்கும். 30 ஆண்டுகளுக்கு முன்னாடி, சிறகு அவரையை நம்ம ஊர்ல வளர்த்து இருக்காங்க.
இதில், புளிக்குழம்பு வைக்கலாம்; சாம்பாரில் போடலாம்.
அவரைக்காய் போல பொரியல் செய்து சாப்பிடலாம். புளிக்காய்ச்சல் ஊறுகாய், ஊறல் போட்டு செய்யலாம்.
மொச்சை மாதிரி அவரை விதைகளை ஊற வைத்து குழம்பு வைத்தும் சாப்பிடலாம். காயை முற்ற விடாமல் இளசாக இருக்கும் போதே பறித்து விட வேண்டும்.
ஒரு வேளை முத்திப் போனால், பருப்பை எடுத்து சமையல் செய்து சாப்பிடலாம். சிறகு அவரையில் மருத்துவ குணங்கள் அதிகம்.
முற்றியதாகவும் இல்லாமல், பிஞ்சாகவும் இல்லாமல், நடுத்தரமாக இருக்கக்கூடிய சிறகு அவரைகளை பறித்து, நறுக்காமல் அப்படியே சாப்பிடலாம்.
இல்லையெனில், நறுக்கிப் போட்டு மிளகுத்துாளும், இந்துப்பும் கலந்து சாலட் செய்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
முற்றிய பின் அவரை பருப்புகளை, சுண்டல் மாதிரி அவித்து சாப்பிடலாம். செடியிலேயே விட்டுட்டால், சிறகு அவரை காய்ஞ்சிடும்.
அதைத் தட்டி பருப்புகளை எடுத்தால், துவரம் பருப்பு போல இருக்கும். நிறைய இருந்தால் சேமித்து வைத்து, காய் கிடைக்காத சமயங்களில் அவிச்சு, தாளித்த சுண்டல் மாதிரி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
