PUBLISHED ON : பிப் 05, 2026 03:48 AM

கடந்த, 50 ஆண்டுகளாக கணவன் - மனைவி என இருவர் மட்டுமே வாழ்ந்து வரும், விருதுநகர் மாவட்டம், குச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த, 85 வயதான போஸ் - சுப்புலட்சுமி தம்பதி: போஸ்: ஒரு காலத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த கிராமம் இது. நான் சிறுவனாக இருந்த போது இந்த ஊரை, சிலர் கொள்ளை அடிச்சிட்டாங்க. அதனால், பயத்தில் மக்களெல்லாம் வேறு வேறு இடத்தில் குடியேறினர்.
பிழைப்பிற்காக வெளியூர் சென்றவர்கள், அங்கேயே வீடு, நிலம் வாங்கி குடியேறி விட்டனர். ஊரை விட்டு போக மனம் வராமல் நானும், மனைவியும் இங்கேயே தங்கிவிட்டோம்.
ஒவ்வொருவராக ஊரை காலி செய்துவிட்டு போகும் போது, மனதுக்கு கஷ்டமாகத் தான் இருக்கும். இப்போது பழகிப் போய்விட்டது.
நாட்டு வைத்தியம் பார்ப்பது, எங்கள் குலத்தொழில். யார் வந்தாலும், ஊருக்கு வெளியே இருக்கும் திண்ணையில் அமர்ந்தே வைத்தியம் பார்த்து அனுப்பி விடுவேன்.
மிகவும் வேண்டியவர்கள் வந்தால் மட்டுமே, வீட்டுக்கு அழைத்து செல்வேன். மாலை 6:00 மணிக்கெல்லாம் கோழிகளை கூண்டுக்குள் அடைத்து விட்டு, நாங்களும் வீட்டுக்குள்ளேயே இருந்து விடுவோம்.
என்னிடம் இருசக்கர வாகனம் உள்ளதால், தினமும் காலையில் திருச்சுழி சென்று, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவேன். என் ஊரின் பெயரை சொல்ல, நாங்கள் இருக்கிறோம்.
எங்களுக்கு துணையாக இந்த ஊரில் கோவில் கொண்டுள்ள, மாரியம்மன் இருக்காங்க. மாரியம்மாவுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்.
வீட்டில், 'டிவி' இல்லை. மொபைல் போனில் இணைய வசதி உள்ளதால், சமூக வலைதளங்களை பார்ப்போம். எங்களுக்கு மூணு மகள்கள், ஒரு மகன்.
எல்லாரும் வெளியூரில் இருப்பதால், போனில் பேசுவர். சண்டை போட்டாலும், சமாதானம் ஆனாலும் எங்களுக்குள் தான். ஊரில் வித்தியாசமான ஆட்கள் நடமாட்டம் தென்பட்டால், காவல் துறைக்கு போன் செய்து தகவல் கூறி விடுவேன்.
சுப்புலட்சுமி: என் குழந்தைகள், எங்களுடனே வந்து விடுங்கள் என்று கூப்பிடுவர். ஆனால், கணவர் ஊரை விட்டு வரமாட்டார்.
நானும் அவர்களுடன் சென்று விட்டால், இவர் தனியாக இருப்பார் என்பதால், யார் வீட்டுக்கும் செல்வது இல்லை.
யாரோ கொள்ளை அடித்ததற்கு இந்த ஊர் என்ன பாவம் செய்தது. எம்புட்டு கஷ்டம் வந்தாலும், என் ஊர் பெயர் சொல்ல நான் இருப்பேன். என் உடம்பு இந்த மண்ணுல தான் விழும்.
நாங்கள் இருக்கும் வரை ஊரும், பெயர் பலகையும் இருக்கும். எங்களுக்கு பின் ஊரை காப்பாற்ற யாராவது வராமலா இருப்பர்?
தொடர்புக்கு
96292 33612

