/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தொழில் ஆர்வமும் வெறியும் தான் வளர்ச்சிக்கு காரணம்!
/
தொழில் ஆர்வமும் வெறியும் தான் வளர்ச்சிக்கு காரணம்!
தொழில் ஆர்வமும் வெறியும் தான் வளர்ச்சிக்கு காரணம்!
தொழில் ஆர்வமும் வெறியும் தான் வளர்ச்சிக்கு காரணம்!
PUBLISHED ON : ஜூலை 04, 2025 12:00 AM

கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் கரூரை சேர்ந்த குணசீலன்: என் சொந்த ஊர் கரூர். 1982ல், கரூர் பேருந்து நிலையம் அருகில் என் அப்பா சிறிய தேநீர் கடையை துவக்கினார்.
பின், ஆனந்த பவன் என்ற பெயரில், தேநீர் கடையுடன் கூடிய உணவகத்தை ஆரம்பித்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே, தந்தைக்கு உதவியாக உணவகத்தில் வேலை செய்வேன்.
பள்ளி படிப்பை முடித்ததும், பெரிய அளவில் ஹோட்டல் பிசினஸ் செய்ய வேண்டும் என்பதற்காகவே, இளங்கலை கேட்டரிங் படிப்பை தேர்ந்தெடுத்தேன். சமையல், பிசினஸ் நிர்வாகம் என அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.
கல்லுாரி இரண்டாம் ஆண்டு படித்தபோது, தந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. படிப்பை நிறுத்திவிட்டு, உணவகத்தில் கடுமையாக உழைத்தேன்; பலனும் நன்றாகவே இருந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
தாராபுரம் துவங்கி ஒட்டன்சத்திரம் வரையிலான புறவழி சாலையில் சைவ உணவகம் எதுவும் இல்லாதது தெரியவந்தது. 'பார்ட்னர்ஷிப்'பில் தாராபுரம் பஸ் நிலையம் அருகே அபூர்வா என்ற பெயரில் சைவ உணவகத்தை துவக்கினேன்.
அங்கு, குழந்தைகளுக்காக வித்தியாசமான உணவுகளையும், பெரியவர்களுக்காக சிறுதானிய உணவுகளையும் பட்டியலில் சேர்த்தோம். அனைத்து பலகாரங்களையும் சுடச்சுட கொடுத்தோம். இது போன்ற உத்திகளால் எந்நேரமும் மக்கள் கூட்டம் இருந்தது.
அடுத்து, சைவ உணவகத்திற்கு எதிரிலேயே கிராமத்து முறையிலான அசைவ உணவகத்தையும் துவங்கினேன். இது, அசைவ பிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இரு உணவகமும் பிசியாக ஓடத் துவங்கிய காலத்தில், கொரோனா ஊரடங்கு வந்தது.
உணவகங்களை தற்காலிகமாக மூடும் நிலை ஏற்பட்டாலும், பணியாளர்களுக்கு ஊதியம் கொடுத்து தக்கவைத்து கொண்டேன். சில மாதங்களில், திருமணங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், உறவினர் ஒருவர், 'வீட்டு திருமணத்திற்கு கேட்டரிங் செய்து கொடுக்க முடியுமா?' என்று கேட்டார்.
உணவு தரமாக இருந்ததால், கொரோனா காலகட்டத்தில் பலரிடம் இருந்தும் கேட்டரிங் ஆர்டர் வந்தது. அனைத்தையும் சிறப்பாக செய்து கொடுத்தேன்.
அதனால், நல்லம்மாள் என்ற பெயரில் கேட்டரிங் நிறுவனத்தை துவக்கினேன். இன்று மேற்கு மண்டலத்தில் உள்ள டாப் 10 கேட்டரிங் நிறுவனங்களில், எங்கள் நிறுவனமும் உள்ளது.
தற்போது ஒன்பது உணவகங்களும், 700 பணியாளர்களும் உள்ளனர். ஆண்டுக்கு 30 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்கிறோம். இந்த வளர்ச்சிக்கு, தொழிலில் எனக்கு இருக்கும் ஆர்வமும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற வெறியும் தான் காரணம்.