/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ரூ.100 கோடி 'டர்ன் ஓவர்' எங்கள் இலக்கு!
/
ரூ.100 கோடி 'டர்ன் ஓவர்' எங்கள் இலக்கு!
PUBLISHED ON : பிப் 22, 2024 12:00 AM

ஜி.வி.எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான சேலத்தைச் சேர்ந்த ரவிகுமார்: -ஜி.வி.எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அது சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை வெறும், 300 அடியில் துவங்கினேன்.
'ரீ சார்ஜபிள் டார்ச் லைட்'டில் ஆரம்பித்து, காலத்திற்கு ஏற்ப பிரின்டர், கம்ப்யூட்டர் பிளாப்பி மற்றும் பிரின்டர் பாகங்கள் விற்பனை, பிரின்டர் டோனர்கள், கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் மீடியாஸ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர்கள் என்று கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் எங்களிடம் வாங்கலாம் என்கிற அளவுக்கு இன்று வளர்ந்திருக்கிறோம்.
ஒரு முறை எங்களிடம் ஒரு கம்ப்யூட்டர் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கிவிட்டால் போதும், அடுத்து, ஐ.டி., தொடர்பான எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும், எங்கள் நிறுவனத்தை தேடி வரும் எண்ணத்தை வாடிக்கையாளர்கள் மனதில் விதைத்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, தனி மனிதர்களுக்கு கம்ப்யூட்டர் பொருட்களை விற்பதே எங்கள் வேலையாக இருந்தது.
ஆனால், இன்று நிறுவனங்களுக்கும் விற்க துவங்கி இருக்கிறோம்.
ஒரு கல்லுாரியில் கம்ப்யூட்டர், 'லேப்' அமைக்க வேண்டும் என்று எங்களை அணுகினால், துவங்கியதில் இருந்து கடைசி வரை அத்தனை வேலைகளையும் செய்து தந்து விடுகிறோம்.
நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டர் தொடர்பான அனைத்து பொருட்களையும் வினியோகிக்க, எங்கள் குழுவினருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். சமீப காலம் வரை சேலம் சார்ந்து பிசினஸ் செய்து கொண்டிருந்தோம்.
ஆனால், இப்போது, 'ஜெம்' இணையதளம் வாயிலாக, பிற மாநிலங்களிலும் விற்பனை செய்ய முயற்சி எடுத்து வருகிறோம்.
எம்.எஸ்., - எம்.பி.ஏ., படித்த என் மகன் பிரணவ், 2019ல் என்னுடன் பிசினசில் ஒரு பார்ட்னராக இணைந்தார்.
சமூக வலைதளங்கள் வாயிலாக இளைஞர் பட்டாளத்தை எளிதாகச் சென்றடைகிறார் என் மகன்.
இதனால், 'ஆன்லைன்' வாயிலான விற்பனையும் கணிசமாக அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது.
தற்போது, 20 கோடி ரூபாய் அளவில் இருக்கும் எங்கள், 'டர்ன் ஓவர்' 2026 - 27ல், 100 கோடி ரூபாய் அளவுக்கு வளர வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம்.
உத்வேகமாகச் செயல்படும், 100 விற்பனை பிரதிநிதிகளை உருவாக்கி, ஒரு லட்சம் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.
இந்த லட்சியத்தை நாங்கள் நிச்சயம் அடைவோம் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. தெளிவான இலக்கு இருந்தால், இமயமலையின் உச்சியை அடைவதுகூட இயலாத காரியமல்ல.