PUBLISHED ON : ஏப் 20, 2026 01:04 AM

திருநெல்வேலியை சேர்ந்த, 54 வயதாகும் எஸ்.காசிவிஸ்வநாதன்:
என் அப்பா, 80 சதவீதம் அன்பும், 20 சதவீதம் கண்டிப்பும் கலந்தவர். அன்பாலும், கண்டிப்பாலும், பல நல்ல பழக்கங்களை என் மனதில் விதைத்தார்.
அவற்றில் ஒன்று தான் சேமிக்கும் பழக்கம். என் பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்கு, 'சஞ்சாயிகா' என்ற சேமிப்பு திட்டம் இருந்தது.
அந்த எண்ணம் தான், நான் பண நிர்வாகத்தில் பக்குவமாக அடியெடுத்து வைக்க காரணமாக இருந்தது. என் பள்ளிப் பருவத்தில் நான் சேமிப்பை பழக வேண்டும் என்பதற்காக, என் அப்பா, அக்கறையுடன் எனக்கு காசு கொடுத்தார்.
' உன் கையில் கிடைத்த பணத்தில், எவ்வளவு சேமிக்க முயல்கிறாய் என்பதற்கான பயிற்சி இது. பிறரோடு ஒப்பிட்டு பார்த்து கவலைப்பட்டால், வாழ்க்கை முழுதும் நிம்மதியற்ற போராட்டமாகி விடும். உன்னால் முடிந்ததை, மிக சரியாக செய்து காட்டு...' என்றார் அப்பா.
குறைந்த சம்பளத்திலும் சேமிக்க ஆரம்பித்தேன். எஞ்சிய பணத்தை சேர்ப்பதில்லை; சேமித்தது போக, மீதி பணத்தையே செலவு செய்ய வேண்டும் என்பது எனக்கு புரிய துவங்கியது.
முதல் செலவாக, சேமிப்பை ஆக்கிக் கொண்டேன். தொடர்ச்சியான சேமிப்பு என்பது, காலப்போக்கில் நிச்சயம் பெரும் தொகையாக வ ளர் ந்து நிற்கும் என்பது என் அனுபவம்.
என் பழைய வீட்டை, பராமரிப்பு செய்து, புதுப்பிக்க வேண்டும் என, சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு வந்தேன். கடன் வாங்காமல் செய்ய வேண்டும் என திட்டமிட்டு, கணிசமாக பணம் சேர்ந்த பின் தான், அதை நிறைவேற்றினேன்.
வீடு, புதுப்பொலிவு பெற்று காட்சி தந்ததை, நான் ரசித்து பார்த்த தருணங்கள் பெரும் மகிழ்ச்சியாக இருந்தன. வங்கிகளிலும் சேமிக்க ஆரம்பித்தேன்.
தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வாங்குவதும், எனக்கு பிடித்த விஷயம். வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு, சேமிப்பில் வாங்கிய தங்கம், வெள்ளி நாணயங்கள் தான் கைகொடுத்தன.
ஒரு முறை, சென்னையில் இருந்து ஊருக்கு சென்ற போது, இடையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 'பெரும் விபத்து நடக்கும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டது' என்று அங்கிருந்த பலரும் பேசிக்கொண்டனர்.
இந் த நிகழ்வு தான், என்னை ஆயுள் காப்பீடு எடுக்கத் துாண்டியது. பள்ளிக்கூட நாட்களில் அப்பா சொன்னது போல, பல கோடி ரூபாயை சேர்க்க வேண்டும் என, அவசரப்படவில்லை, சில லட்சங்கள் சேர்க்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையுடன், செயல்படுகிறேன்.
நிதானமாக செல்லும் நிதி ப் பயணம், நிச்சயமாக இலக்குகளை அடைய உதவும் என்பது, என் அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்கு நானே நல்ல உதாரணம்!

