
'முந்திச் செல்லும்எண்ணமேசாதிக்க வைத்தது!'
'நேஷனல் பைக் ரேசில்' கலந்து கொள்ளும் ஆர்வம் பற்றி சொல்கிறார் மதன்: திருச்சி என் சொந்த ஊர்.
என் பத்தாவது வயதில், பைக் ஓட்டக் கற்றுக் கொண்டேன். 'பைக் ரேசில்' பங்கேற்று ஜெயிப்பேன் என, சிறிதளவும் எண்ணவில்லை. பதினைந்து வயதில், நண்பர்களின் பைக்கை வாங்கி ஓட்டும் போது, முந்திச் செல்லணும் என்கிற எண்ணமே, என்னை முதலிடம் பெறச் செய்தது.என் 16 வயதில், 'கோயம்புத்தூர் மோட்டார் ரேசில்' சொந்தமாக பைக் இல்லாததால், என் நண்பன் பைக்கை வைத்து கலந்து கொண்டேன்.
முதல் பரிசைப் பெற்றேன். அன்று ஆரம்பித்த ஆர்வம், இன்றும் பந்தயங்களில் தொடர்ந்து என்னை வெற்றி பெற வைக்கிறது.சமீபத்தில், 'யமாஹா பைக்' நிறுவனம் நடத்திய பந்தயத்தில், முதலிடம் பெற்றேன். பந்தயத்தில் கலந்து கொள்ள, 150 சி.சி., திறன் கொண்ட என் பைக்கை, 165 சி.சி., திறன் கொடுக்கும் பைக்காக மாற்றியமைத்தேன். முக்கியப் பந்தயங்களில் கலந்து கொள்ளும் பயிற்சியை,'மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்' அளிக்கிறது.
இங்கு சேர்ந்து, நேரடியாக ரேசில் கலந்து கொள்ள, மூன்று நாள் பயிற்சி எடுத்தேன்.புதிய லைசென்ஸ், பந்தயத்திற்கு முன் புதிய டயர்கள் பொருத்துதல் போன்றவற்றிக்கு, அதிகப் பணம் செலவாகும்.ரேசில் மிகுதியான ஆர்வமும், தன்னம்பிக்கையும், மன உறுதியும் இருந்தால் தான் வெற்றி பெற முடியும். கடந்தாண்டில் நடந்த பல பந்தயங்களில் வெற்றி பெற்று, 50 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளேன். இந்தாண்டு நடக்கும்,'நேஷனல் மோட்டோ ஜி.பி., 125 சி.சி., பைக் ரேசில்' சாம்பியன் பட்டத்தை வெல்வதே என் லட்சியம்!