PUBLISHED ON : மார் 04, 2026 02:06 AM

சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட, கர்நாடக இசை பிரபலங்களான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்: ரஞ்சனி: ஒரு தாய், தன் வேலைக்காக வெளியே சென்றால், சுயநலவாதி என்று முத்திரை குத்திவிடுவர்.
எங்களை புரிந்துகொண்ட குடும்பம் அமைந்தது பெரிய வரம். வேலையில் கவனம் செலுத்தாமல் இருந்திருந்தால், இன்னும் நல்ல அம்மாவாக இருந்திருப்போமோ என்ற சந்தேகம் எங்களுக்கும் இருந்தது.
குழந்தைகளிடம் மனம் விட்டு பேசிய போது தான், அந்த பயம் எங்கள் கற்பனை என்று புரிந்தது.
எங்களின் இசை பயணத்தில் இந்த விருது முக்கியமான மைல்கல். இந்த அங்கீகாரம், எங்களின் குருமார்களான, டி.எஸ்.கிருஷ்ணசாமி மற்றும் பி.எஸ்.நாராயணசாமி ஆகியோருக்கும், எங்கள் பெற்றோருக்கும் சமர்ப்பணம்.
இசையை நாங்கள் ஒரு சமூக கடமையாகவே பார்க்கிறோம். ஒரு முறை, குழந்தைகளின் கண் சிகிச்சைக்காக நிதி திரட்டும் கச்சேரி நடத்தினோம்.
அதில், கண்கள் தொடர்பான பாடல்கள் மட்டுமின்றி, அந்த சிகிச்சையின் அவசியத்தை விளக்கும் வகையில், சில வரிகளை நாங்களே உருவாக்கி பாடினோம். இசை நல்ல காரியங்களுக்கு பயன்படுவது, மிகுந்த மனநிறைவை தருகிறது.

காயத்ரி: மரண விளிம்பில் இருந்த ஒரு ரசிகர், எங்களிடம் வந்து, 'நான் இந்த போராட்டத்தில் மீண்டும் பிழைத்து வந்ததற்கு ஒரே காரணம், உங்கள் இசையை கேட்காமல் சென்று விடுவேனோ என்கிற பயம் தான்' என்றார்.
நீண்ட காலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, பேச்சுத்திறன் இழந்த வயதான அம்மா ஒருவர், தொலைக்காட்சியில் எங்களின் பாடலை கேட்டு, எங்களை பாராட்டுவதற்காக மீண்டும் பேசத் துவங்கினார். இவையெல்லாம் எங்களின் திறமையல்ல, சங்கீதம் என்ற மகா சக்தியின் வாயிலாக நடந்த அதிசயங்கள்.
அந்த சக்தியின் உதவிகளாக நாங்கள் இருந்தோம் என்பதே எங்களுக்கு பெருமை.
இந்திய பாரம்பரிய இசையின் பிரதிநிதிகளாக இந்த மரபை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் பொறுப்பு, எங்களுக்கு இன்னும் கூடியிருப்பதாகவே உணர்கிறோம்.
எங்களை பொறுத்தவரை பக்தி என்பது, ஒரு விஷயத்தில் நாம் கொள்ளும் அதீத ஈடுபாடே ஆகும். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் போது, நம்மை சுற்றியுள்ள உலகை நாம் மறக்கிறோமோ, அதுவே பக்தி.
ஒரு கலையை கற்றுக் கொள்வதால் என்ன கிடைக்கும் என்ற லாப கணக்கை பார்க்காதீர்கள். நமக்கு ஒரு விஷயம் பிடிக்கும் என்றால், எத்தனை பொறுப்புகள் இருந்தாலும், அதற்காக நேரம் ஒதுக்க முடியும்.
ஆர்வத்தை தொழிலாக மாற்றுவது மட்டுமே வெற்றியல்ல; எந்த சூழலிலும் உங்கள் ஆர்வத்தை தொடர்வதே உண்மையான வெற்றி.

