/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய அக்கா மகள்!
/
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய அக்கா மகள்!
PUBLISHED ON : டிச 25, 2024 12:00 AM

'பேஷன் டிசைனிங், மிஸ் மதராசி' மற்றும் திருநங்கையருக்கான அழகி போட்டி என, அனைத்திலும் பங்கேற்று வெற்றி வாகை சூடும் திருநங்கை பிராஸி:
கோவையில் நிறைய உறவுகளை கொண்ட பெரிய குடும்பம் எங்களுடையது. அப்பாவுக்கு நான்கு சகோதரர்கள்; அனைவருக்குமே தலா இரு பெண் குழந்தைகள். அடுத்தடுத்த வீடுகள்; கிட்டத்தட்ட கூட்டுக்குடும்பம் மாதிரி தான்.
என் கூட பிறந்தது ஒரு அக்கா. இளவரசன் மாதிரி தான் வளர்ந்தேன். அந்த வளாகத்துக்கே ஒற்றை ஆண் பிள்ளை நான் தான்.
ஆனால், எனக்கு அக்காக்கள் உடுத்தும் ஆடைகள் தான் பிடிக்கும். யாரும் இல்லாதபோது, அவர்கள் உடைகளை போட்டு பார்ப்பது, மை இட்டுக் கொள்வது என, எனக்குள் இருந்த பெண்மையை ரசிப்பேன்.
ஒரு கட்டத்தில் விஷயம் தெரிய வர, அடி, உதை என பிரச்னை பெரிதாகி, எட்டாம் வகுப்புடன் படிப்பும் நின்று விட்டது. வீட்டுக்கு பெரிய சுமையாகி விட்டேன்.
ஒரு நாள் கால் போன போக்கில் கிளம்பி, எங்கு செல்வது என தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னை மாதிரியே இருந்த இருவர் வந்து, என்னை மும்பை அழைத்து சென்றனர்.
அங்கே ஒரு திருநங்கை தாயிடம் ஒப்படைத்தனர். அவர், எனக்கு கை தட்ட பயிற்சி கொடுத்து, மும்பை சிக்னல்களில் பிச்சையெடுக்க அனுப்பி விட்டார்.
ஒரு கட்டத்தில் மும்பையில் இருக்க பிடிக்காமல், திருப்பூர் செல்லும் ரயிலில் ஏறி விட்டேன். திருப்பூரில் இறங்கும் போது இரவு 9:00 மணி.
அப்போது என் பக்கத்தில் இருந்த ஒரு ஆசிரியை தான் என் தலை கோதி, ஆறுதல் சொல்லி, ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விட்டார். தொலைநிலை கல்வியில் பிளஸ் 2 வரை படிக்க வைத்தார்.
அவரது வழிகாட்டுதலில், 'நிப்ட்' நுழைவுத் தேர்வு எழுதினேன். இடம் கிடைத்து பேஷன் டிசைனிங் படித்து, 'பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட்' விருதுடன் 2018ல் வெளியே வந்தேன்.
சென்னை வந்து, மிகுந்த சிரமத்துக்கு பின், ஆடை வடிவமைப்பு கல்லுாரியில் பேராசிரியர் வேலை கிடைத்தது; சக மாணவர்கள், ஆசிரியர்கள் நன்றாக பழகினர்.
இந்தோனேஷியாவில் நடந்த திருநங்கையருக்கான உலக அழகி போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்றேன்; அங்கு மூன்றாவது, 'ரன்னர் அப்'பாக தேர்வானேன்.
நான் திருப்பூரில் பணியாற்றிய காலத்தில், உதவியாக இருந்த சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். என் பெற்றோரையும் என்னுடன் அழைத்து வந்து விட்டேன்.
என் அக்காவே தன் இரண்டாவது மகளை, 'உன்னை மாதிரி நல்ல நிலைக்கு கொண்டு வா' என்று கூறி, என்னிடம் வளர்க்க கொடுத்து விட்டாள். தற்போது அவள் எங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி விட்டாள்.

