'அப்பாவாக இருந்து கற்றுக் கொடுக்கும் 10 வயது பின்னி!'
'அப்பாவாக இருந்து கற்றுக் கொடுக்கும் 10 வயது பின்னி!'
PUBLISHED ON : ஆக 26, 2026 12:00 AM

மரபணு கோளாறுடன் பிறந்த ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் திருமணமாகாத இளைஞரான, மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த ஆதித்யா திவாரி:
மஹாராஷ்டிர மாநிலம், இந்துாரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் நான். வீட்டில் நமக்கு என்ன கஷ்டம் இருந்தாலும், அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதை சொல்லி வளர்த்தனர். பொதுவாக, திருமணத்திற்கு பின் தான் தத்து எடுப்பதை குறித்து யோசிப்பர். ஆனால், எனக்கு ஒரு குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்ற எண்ணம், மிகவும் சிறு வயதிலேயே மனதில் பதிந்து விட்டது.
அன்று என் தந்தையின் பிறந்த நாள். இந்துாரில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு இனிப்புகள் கொடுக்க சென்றோம். என் பார்வை, ஒரு குழந்தை மேல் பதிந்தது; அவன் தான் பின்னி. அவன் ஒரு சிறப்பு குழந்தை என்றும், அதனால் அவனை யாருமே தத்து எடுக்க தயாராக இல்லை என்றும் தெரிந்தது. அந்த நிமிடமே, அவனை தத்தெடுக்க தயாரா இருப்பதாக கூறினேன்.
'திருமணமாகாத ஆணும், 30 வயதிற்கு குறைவானவங்களும் தத்தெடுக்க, இந்திய சட்டத்தில் இடமில்லை' என்று கூறினர். அப்போது எனக்கு வயது, 27. வேறு வழி தெரியாததால், பின்னியின் செலவுகளை முழுமையாக நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி, அவர்களை சம்மதிக்க வைத்தேன்.
மேலும், சட்டப்படி தத்தெடுப்பதற்கான முயற்சிகளையும் ஆரம்பித்தேன். மத்திய அரசு, பிரதமர், ஜனாதிபதி என பலருக்கும் கடிதங்கள் அனுப்பினேன். அந்த நேரம், தத்தெடுப்பு சட்டங்களில் புது விதிகளை சேர்ப்பதற்கான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அதன்படி, 'தத்து எடுப்போருக்கு, 25 வயது நிறைந்திருந்தால் போதும்' என்று கூறினர். எல்லாம் கைகூடி, 2016 ஜன., 1ம் தேதி, பின்னியை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
அவனுக்கு அவ்னீஷ் என்று பெயர் மாற்றினேன். இப்போது அவனுக்கு வயது, 10. அவனால் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக, அழகானதாக மாறி இருக்கிறது. அவனுக்கு இசை பிடிக்கும். சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில் தயாராகி வருகிறான். வன விலங்குகள் பிடிக்கும்; புலிகளை காப்போம் விழிப்புணர்விற்காக தயாராகி வருகிறான்.
அவன் வளர்ந்த பின், இதையெல்லாம் செய்ய ஆசைப்பட்டால், அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து, உதவி செய்ய நினைக்கிறேன்.
அவன் எப்போதும் சிரித்தபடியே இருப்பான்; யாருடனும் தன்னை ஒப்பிட்டு பார்க்க மாட்டான்; என்ன இருக்கிறதோ அதில் திருப்தியாகி விடுவான். அந்த குணம் வாய்ப்பது, ஒரு வரம். அவனிடமிருந்து நானும் கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன்; அப்பாவாக இருந்து கற்றுக் கொடுத்து வருகிறான்.
***
