/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஏறாத மலைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட வேண்டும்!
/
ஏறாத மலைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட வேண்டும்!
PUBLISHED ON : பிப் 03, 2026 03:00 AM

உலகின் மிக உயர்ந்த சிகரங்களில், தேசியக் கொடியை ஏற்றி உச்சம் தொட்டிருக்கும், புதுச்சேரி மாநிலம், கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திவ்யா: என், 7 வயதிலேயே தாயை இழந்து விட்டேன். தந்தை மறுமணம் செய்து கொண்டதால், நானும், என் தம்பியும் தாத்தா - பாட்டி அரவணைப்பில் தான் வளர்ந்தோம். நிலத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து தான் எங்களை வளர்த்து ஆளாக்கினர்.
தொழில்நுட்ப கல்வி முடித்து விட்டு, பயிற்சி பணிக்காக மஹாராஷ்டிர மாநிலம், புனே சென்றேன். அப்போது தான் மலையேற்றத்தின் மீது தீராத காதல் ஏற்பட்டது.
ஆயினும், குடும்பத்தின் துாணாக இருந்த தாத்தா மறைவு, மாட்டுப் பண்ணையில் ஏற்பட்ட நஷ்டம், கூட்டாளிகளின் ஏமாற்று வேலை என, அடுத்தடுத்து பிரச்னைகள் வந்தன.
விரக்தியின் எல்லைக்கு சென்று தற்கொலைக்கு முயன்று, தீவிர சிகிச்சை பிரிவில் மரணத்துடன் போராடி மீண்டு வந்தேன்.
ஒரு கட்டத்தில், எல்லாவற்றிலும் இருந்து மீண்டு வந்தேன். என் பயண கனவுகளை துாசு தட்டினேன். உடல்நலக் குறைபாடுகளையும் பொருட்படுத்தாமல், இமயமலையின் கேதர்கந்தா சிகரத்தில் என் முதல் அடியை வைத்தேன்.
மலையேற்றத்தின் நுணுக்கங்களை கற்க, தேசிய மலையேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளையாட்டு நிறுவனத்தில் சேர்ந்து, ராணுவத்தினருக்கு இணையான கடினமான பயிற்சிகளை முடித்தேன். பனிப்பாறைகளில் ஏறி பழகினேன்.
ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரம், எல்ப்ரஸ். இதை தொட்ட, புதுச்சேரியைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறேன்.
கார்கிலில் உள்ள, 7,070 மீட்டர் உயர குன் மற்றும் நுன் மலைகளில் ஏறிய முதல் தமிழ் பெண் நான் தான்.
ராணுவத்தினருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் இங்கு, ஒவ்வொரு ஆண்டும் அனுமதி வழங்கப்படும் இருவரில் ஒருவராக, நான் இந்த சாதனையை படைத்துள்ளேன்.
சமீபத்தில், இந்தியா - நேபாளம் எல்லையில் உள்ள, காப்ருடோம் மலையில், 20,000 அடி உயரத்தை எட்டி திரும்பியுள்ளேன். எனக்காக பாட்டி சேர்த்து வைத்திருந்த நகைகளை விற்று தான், ரஷ்யா, கார்கில் என அடுத்தடுத்து மலைகளில் ஏறினேன்.
இதையெல்லாம் வைத்து அரசு வேலை வாங்குவதோ, விருது வாங்குவதோ என் எண்ணம் கிடையாது. என் லட்சியங்களே வேறு. இமயமலை தொடர்களில், இன்னும் ஏறப்படாத மலைகள், 100க்கும் மேல் உள்ளன.
அவற்றில் என்னால் முடிந்த மலைகளில் ஏறி, அவற்றுக்கெல்லாம் தமிழ் பெயர்கள் வைக்க வேண்டும். என்னை போன்று, எந்த பின்னணியும் இல்லாத கிராமத்து பெண்களை மலையேற்ற வீராங்கனையராக்கி, சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்பதே என் லட்சியம்!

