/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இயற்கை விவசாயத்தை பரவலாக்கணும்!
/
இயற்கை விவசாயத்தை பரவலாக்கணும்!
PUBLISHED ON : மார் 11, 2026 01:46 AM

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான, 50 வயதாகும் மார்க்கண்டேயன்:
விளாத்திகுளத்தில் இருந்து, 8 கி.மீ.,யில் உள்ள ராமச்சந்திராபுரம் கிராமம் தான், என்னோட சொந்த ஊர்; பல தலைமுறையாக விவசாயம் செய்கிறோம். நான், பி.ஏ., - பி.எல்., முடித்துவிட்டு வழக்கறிஞர் தொழில், அரசியல் என்றுபரபரப்பாக இயங்க ஆரம்பித்தேன்.
ஆனாலும் விவசாயத்துக்கும், எனக்குமான உறவு நீடித்து வருகிறது. ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளாக தரிசாக, சீமை கருவேல மரங்கள் மண்டி கிடந்தது. அந்த நிலத்தை சீர்படுத்தி, வேலியோரங்களில் சவுக்கு மரங்களும், பழ மரங்களும் நட்டேன்.
அந்த பழ மரங்களில் இருந்து, ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்கு ஆண்டுக்கு, 4 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம், முறையான பராமரிப்பு இல்லாமல் கிடந்தது.
'மாட்டு பண்ணை அமைத்து, இயற்கை விவசாயம் செய்யலாம்' என்று என் மகன் கூறவே, 'அம்பாள் கோசாலை இயற்கை வேளாண் பண்ணை' என்ற பெயரில், 2012ல் இந்த பண்ணையை ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில், பண்ணையில் நான்கு மாடுகள் தான் இருந்தன. இப்போது, 70 கலப்பின பசு மாடுகளும், 20 கன்றுக்குட்டிகளும், 10 நாட்டுப் பசு மாடுகளும் இருக்கின்றன. மாட்டுச் சாணம், சிறுநீரை சேகரித்து, 'பயோ காஸ்' மூலம், மின்சாரமும் உற்பத்தி செய்கிறேன்.
இதில் தினமும், 15 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கிறது. இதை, என் பண்ணை வீடு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பயன்படுத்தி கொள்கிறேன்.
மொத்தமுள்ள 25 ஏக்கரில், 5 ஏக்கரில் மாட்டு, ஆட்டு கொட்டகை அமைத்து, பசுந்தீவனம் பயிர் செய்கிறேன். 10 ஏக்கரில் குண்டு மிளகாயும், மேலும் பலவிதமான காய்கறிகள், கீரைகள், மூலிகைகளை பயிர் செய்து வருகிறேன்.
மழைநீர் சேமிப்புக்காக, 100 அடி நீளம், 25 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட பண்ணை குட்டை அமைத்து உள்ளேன்; அதில் விறால் மீன் வளர்க்கிறேன். ஒரு ஓலை கொட்டகை அமைத்து வாத்துகள் வளர்க்கிறேன். மாட்டுப் பாலை நேரடியாக விற்பனை செய்யாமல், நெய்யாகவும், பனீராகவும் மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறேன்.
நஷ்டம் ஏற்படாத அளவுக்கு, பண்ணையை நிர்வாகம் செய்யும் வகையில் வருமானம் கிடைக்கிறது. இயற்கை விவசாயம் வாயிலாக, ரசாயன நச்சுத்தன்மை இல்லாத பொருட்களை சாகுபடி செய்து, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்; மற்ற விவசாயிகளுக்கும் ஊக்கமாக இருக்க வேண்டும். இதுதான் என் நோக்கம்.

