/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஆரோக்கியமான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்கணும்!
/
ஆரோக்கியமான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்கணும்!
ஆரோக்கியமான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்கணும்!
ஆரோக்கியமான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்கணும்!
PUBLISHED ON : டிச 29, 2024 12:00 AM

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில், குறிஞ்சி இயற்கையகம், அமிழ்து மலிவு விலை உணவகம், இயல்வாகை நுாலகம் நடத்தி வரும், 'இயல்வாகை' அழகேஸ்வரி: உடுமலைப்பேட்டை அடுத்த போத்தநாயக்கனுாரில் தான் பிறந்து வளர்ந்தேன். வணிகவியலில் இளங்கலை படிப்பை முடித்ததும், சாயப்பட்டறை தொழிற்சாலையில் கண்காணிப்பாளராக பணி செய்து வந்தேன்.
'அதிகம் சம்பாதிக்க வேண்டும்' என்பதே குறிக்கோளாக இருந்த எனக்கு, நம்மாழ்வார் அய்யாவை சந்தித்த சில நாட்களிலேயே, 'பணம் ஒரு பொருட்டே இல்லை. அரை காணி நிலத்தை வைத்தே நோயற்ற, நிம்மதியான தற்சார்பு வாழ்வை வாழலாம்' என்பது புரிந்தது.
அவருடன் தொடர்ந்து பயணித்தபோது, அவரை போலவே இந்த மாற்றத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க இயன்றதை செய்ய முடிவு செய்தேன்.
இதற்காக ஊத்துக்குளியில், 'இயல்வாகை' என்ற அமைப்பை நிறுவி, பாரம்பரிய விதைகளை காக்கவும், அதை பரவலாக்கவும் தொடர்ந்து முயற்சிக்கிறேன்.
எல்லா புத்தக திருவிழாக்களிலும் நாட்டு காய்கறிகள் மற்றும் கீரை விதைகளை வழங்கி வருகிறேன். எங்களுடைய பயிற்சி பட்டறை வாயிலாக, பயிர்களை லாபகரமாக சாகுபடி செய்வது, விளை பொருட்களை மதிப்பு கூட்டுவது குறித்து, இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கிறோம்.
மேலும், பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களில், குழந்தைகளும் விரும்பும் வகையில் கேக், பிஸ்கட், லட்டு, அல்வா, பிரவுனி உள்ளிட்ட தின்பண்டங்களை, ரசாயனங்கள் எதுவும் சேர்க்காமல் செய்வதற்கான பயிற்சிகளையும் அளிக்கிறோம்.
'உரியார்க்கு உணவு ஈதல்' என்ற அடிப்படையில், பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களை கொண்டு, காலை சிற்றுண்டி தயார் செய்து, 5 ரூபாய்க்கு தருகிறோம்.
பள்ளி குழந்தைகளிடம், வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, இலவச நுாலகத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
இடைநின்ற பிள்ளைகளை மீண்டும் படிக்க வைத்து, அவர்களின் மேற்படிப்புக்கும் உதவுகிறோம். என்னுடன் கணவரும் பங்கேற்பது, என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது.
பாக்கெட்டுகளில் விற்கப்படும் செயற்கை உணவுகளை கொடுக்காமல், ஆரோக்கியமான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். சின்ன சின்ன உடல் உபாதைகளை, இயற்கை வைத்திய முறைகளில் குணப்படுத்திக் கொள்ளலாம்.
இப்படி சில விஷயங்களை மாற்றி கொண்டாலே, ஆரோக்கியமான தலைமுறையை நிச்சயம் உருவாக்கலாம்! -தொடர்புக்கு 99421 18080
*************
குறைந்த முதலீட்டில் லாபகரமான தொழில்!
'ஹோம் மேட் கேக்' மட்டுமல்லாமல், விதவிதமான டோனட், மில்லட் குக்கீஸ்களை செயற்கை நிறமூட்டிகள் இன்றி தயாரிக்கும், சென்னையைச் சேர்ந்த லஷ்மி
சிதானந்தா:
என் மகனுக்காக வீட்டிலேயே டோனட் தயாரித்து வந்தேன். நான் தயாரித்த டோனட் மற்றும் குக்கீஸை சுவைத்து பார்த்த அக்கம் பக்கத்தினர், 'இதை தொழிலாகவே செய்யலாமே' என்று கூறியதை அடுத்து, பேக்கரி தொழிலில் இறங்கினேன்.
முறையான பயிற்சிகள், கேக் தயாரிக்கும் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். மூன்று ஆண்டுகளாக தொழில் சிறப்பாக நடக்கிறது.
மைதா, சர்க்கரை, பிரிசர்வேட்டிவ்கள் மற்றும் கலர் பொருட்களை தவிர்த்து, சிறுதானியங்களை பயன்படுத்தி கேக் மற்றும் குக்கீஸ் தயாரித்து தருகிறேன். சிலவகை தானியங்களை முளைகட்டி, அரைத்து பயன்படுத்தி செய்வது தனிச்சிறப்பு.
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை, வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு, வெண்ணெய் மற்றும் செக்கில் ஆட்டிய சுத்தமான ஆர்கானிக் எண்ணெயை தான் பயன்படுத்துகிறேன். இதனால், தரமும், சுவையும் எப்போதும் சிறப்பாக இருக்கும்.
முட்டையில்லாத கேக் மற்றும் வீகன் கேக்குகளையும்
தயாரிக்கிறேன். வாய்மொழி விளம்பரங்கள் மூலமாகத்தான் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். தவிர, சமூக வலைதளங்கள், ஸ்டால்கள் வாயிலாகவும் விற்கிறோம்.
பிரெஷ் கேக்குகள் மற்றும் குக்கீஸ் ஆர்டர்களை, சென்னை முழுக்க தற்போது செய்து கொடுக்கிறேன். சிலவகை டிரை கேக்குகள் மற்றும்
குக்கீஸை இந்தியா முழுதும் ஆர்டர்படி அனுப்புகிறேன்.
கிட்டத்தட்ட 500 பேர் பங்கேற்ற, 'தினமலர் - மில்லட் மகாராணி' போட்டியில், இரண்டாம் பரிசு பெற்றது, மறக்க முடியாத மகிழ்ச்சியான
அனுபவம். போட்டியின் நடுவராக இருந்த, 'செப்' தாமு, நான் தயாரித்த ராகி பிரவுனியை சுவைத்த பின், வெகுவாகப் பாராட்டியதை மறக்க முடியாது. என் சமையல் திறனுக்காக, 'வெற்றி திருமகள்' சாதனை விருது உட்பட சில விருது
களையும் பெற்றுஉள்ளேன்.
பேக்கரி உணவுகள் செய்வது குறித்து ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் வகுப்புகள் நடத்துகிறேன். இந்த தொழிலில் ஆர்வம், முயற்சி,
கற்பனைத்திறன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.வீட்டிலேயே சிறிய அளவில் துவங்கி, வெற்றிகரமாக நடத்தலாம். குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய லாபகரமான இந்த தொழிலில், தரம் மற்றும் நுகர்வோரின் ஆரோக்கியத்தில் கவனம் வைத்தால், வெற்றி நிச்சயம்.

