/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பழனி பஞ்சாமிர்தத்துக்கு நாட்டு சர்க்கரை சப்ளை செய்கிறோம்!
/
பழனி பஞ்சாமிர்தத்துக்கு நாட்டு சர்க்கரை சப்ளை செய்கிறோம்!
பழனி பஞ்சாமிர்தத்துக்கு நாட்டு சர்க்கரை சப்ளை செய்கிறோம்!
பழனி பஞ்சாமிர்தத்துக்கு நாட்டு சர்க்கரை சப்ளை செய்கிறோம்!
PUBLISHED ON : பிப் 11, 2026 02:12 AM

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில், விவசாயிகளை ஒருங்கிணைத்து இயற்கை முறையில் நாட்டு சர்க்கரை மற்றும் மண்டை வெல்லம் தயாரித்து, விற்பனை செய்து வரும், 59 வயதான வேலப்பன்: கடந்த, 300 ஆண்டுகளுக்கு முன்பே கவுந்தப்பாடியிலும், சித்தோடிலும் வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரித்து, பெரிய அளவில் வணிகமாகி இருக்கிறது.
மற்ற விவசாயிகள் போன்று கரும்பை ஆலைகளுக்கு விற்காமல், வெல்லமாகவும் சர்க்கரையாகவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வோம்.
கரும்பை அரைத்து வெல்லமாக மாற்ற ஒரு வாரம் ஆகும். பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே வியாபாரம் ஆரம்பித்து விடும். பொங்கல் நேரத்தில் மட்டும் குறைந்தது, 5 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடக்கும்.
பல இடங்களுக்கும் சென்று தான், இயற்கை முறையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டேன். எட்டு ஆண்டுகளுக்கு முன், 'பலராமர் வேளாண்மை உற்பத்தியாளர் கம்பெனி' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
600க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளை ஒருங்கிணைத்து, ரசாயனமே சேர்க்காத நாட்டு சர்க்கரை தயாரித்து விற்கிறோம்.
மத்திய பிரதேசம் வரை எங்கள் நாட்டு சர்க்கரை செல்கிறது. பழனி தண்டாயுதபாணி கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக தரும் பஞ்சாமிர்தத்தை எங்கள் ஊர் நாட்டு சர்க்கரையில் தான் தயாரிக்கின்றனர். ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் இங்கிருந்து தான் நாட்டு சர்க்கரை செல்கிறது.
இதில், 3 கோடி ரூபாய்க்கு மேல் நாங்களே அனுப்புகிறோம். சபரிமலை சீசனிலும் நாட்டு சர்க்கரை கொள்முதல் அதிகமாக இருக்கும். கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டிருப்பதால், அது சந்தையை இன்னும் பெரிதாக்கி இருக்கிறது.
எங்கள் மண்டை வெல்லத்தை உடைக்கும்போது, எந்த கட்டியும் இல்லாமல் உடையும். கசக்கவோ, திகட்டவோ செய்யாது; இனிப்பும் தரமாக இருக்கும். தரமான நாட்டு சர்க்கரை தங்க நிறத்தில் இருக்கும்; ஓராண்டு ஆனாலும் கெட்டுப் போகாது.
இயற்கை நாட்டு சர்க்கரை தயாரிக்க, கடுக்காய்த்துாள், ஆவாரம்பூ, தனியா மற்றும் ஏலக்காய் அரைத்து பொடியாக்கி வைத்திருப்போம்.
கரும்பு சாறை காய்ச்சி எடுத்து கொப்பரைக்கு மாற்றும்போது ஒரு கொப்பரைக்கு, 1 கிலோ வீதம் போட்டு கலந்திடுவோம். இது, நாட்டு சர்க்கரைக்கு நல்ல வாசனையையும், மருத்துவ குணத்தையும் தரும்.
மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கரும்பு விவசாயிகளையும், மதிப்புக்கூட்டு தொழில்களையும் ஊக்கப்படுத்த அரசு பல திட்டங்களை உருவாக்குகிறது. தமிழக அரசும் அப்படி செய்ய வேண்டும்!
தொடர்புக்கு: 94426 41644.

