PUBLISHED ON : மார் 23, 2026 12:04 AM

ஒப்பனை கலைஞர்கள், அழகு நிலையம் தொழில் செய்ய விரும்புவோருக்கு ஆலோசனைகள் வழங்கும், சென்னையைச் சேர்ந்த, 'பி 3 பிரைடல் ஸ்டூடியோ' உரிமையாளர் கார்த்திகா: குறுகிய கால ஒரு வார பயிற்சி துவங்கி, டிப்ளமா படிப்பு வரை தற்போது ஒப்பனை கலை கற்றுக் கொடுக்கப்படுகிறது.
பயிற்சிக்கான இடத்தை தேர்வு செய்யும் போது, நாம் கற்றுக் கொள்ள விரும்பும் விஷயங்கள் பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றனவா; அங்கு, ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் தற்போது வெற்றிகரமாக இருக்கின்றனரா; சமூக வலைதளங்களில் வெளியிடும் மதிப்பாய்வு, அவர்கள் கொடுக்கும் சான்றிதழ் பயனுள்ளதாக இருக்குமா என, எல்லா விஷயங்களையும் பார்க்க வேண்டும்.
தலை அலங்காரம், நகம் அழகுபடுத்துதல், புடவை கட்டி விடுதல், மருதாணி வைத்து விடுதல் மற்றும் கூந்தல் பராமரிப்பு என, ஒப்பனை துறையுடன் தொடர்புடைய பிற விஷயங்களையும் கற் றுக் கொள்ள வேண்டும்.
குறைந்தபட்சம் ஆறு மாத பயிற்சிகளை கற்றுக் கொள்ளலாம். பயிற்சி முடித்த உடனே அழகு நிலையம் துவங்க வேண்டும் என்று அவசியமில்லை.
ஒப்பனை கலை குறித்த பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிரலாம்; இதன் வாயிலாக, வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிப்பர்.
வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று சேவை செய்தால், பெரிய முதலீடு தேவைப்படாது. பொருட்கள் மற்றும் கருவிகள் வாங்க, 50,000 ரூபாய் வரை தேவைப்படலாம்.
கடை துவங்குவதாக இருந்தால், 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். சிறுதொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வங்கிகளில் கிடைக்கும். திருமணத்திற்கு செய்யும் ஒப்பனை அதிக லாபம் தரும்.
அதிகாலை முகூர்த்தம் இருந்தால், இரவில் இருந்தே ஒப்பனை செய்ய வேண்டியிருக்கும். துாக்கம், சாப்பாடு போன்றவை பாதிக்கப்படலாம். அதிகம் பயணிக்க வேண்டியிருக்கும். நம் குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமல் போகலாம். இதற்கு எல்லாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.
ஒப்பனைக்கான கட்டணத்தில் நாம் ஏமாறாமல் இருக்க, முதலிலேயே 50 சதவீத கட்டணம் வாங்கி விடலாம். நிகழ்ச்சி நடக்கும் நாளில் மீதம் 50 சதவீத கட்டணத்தை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து விடலாம்.
வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் சேவையை கொடுத்தால், ஆறு மாதங்களில் இருந்து ஓராண்டுக்குள் நல்ல முன்னேற்றம் காண முடியும்.
திறமையை வளர்த்துக் கொண்டு தீவிரமாக உழைத்தால், மாதம் 60,000 முதல் 80,000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும். நாம் அளிக்கும் சேவை தரமாக இருந்தால், வாய் வழி விளம்பரம் மூலமாக அடுத்தடுத்து வாடிக்கையாளர்களும் அதிகரிப்பர்.
