/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஏடாகூட புகாரில் சிக்கிய போலீஸ் அதிகாரி!
/
ஏடாகூட புகாரில் சிக்கிய போலீஸ் அதிகாரி!
PUBLISHED ON : மார் 30, 2024 12:00 AM

''மண் விற்பனை கனஜோரா நடக்கறது ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியைபருகினார் குப்பண்ணா.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''நீலகிரி மாவட்டம், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் சமீப காலமாக, பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி மண் மேடுகளை அகற்றி, மண் விற்பனை செய்யும் பணி ஜோரா நடக்கறது... இதை கவனிக்க வேண்டிய வருவாய் துறை அதிகாரிகள், தங்களது பாக்கெட்டுகள் நிரம்பிடறதால, யார் புகார் குடுத்தாலும் கண்டுக்க மாட்டேங்கறா ஓய்...
''புதுசா வந்த வருவாய் துறை ஆர்.டி.ஓ.,வாவது இதுல நடவடிக்கை எடுப்பார்னு பார்த்தா, அவரும் மாமூல் பாதையில தான் போறார்... இப்படி, இஷ்டத்துக்கு மண்ணை அள்ளி விக்கறதால, பருவமழை காலத்தில் பெரிய அளவிலான இயற்கை பேரிடர்கள் ஏற்படும் அபாயம் இருக்கு ஓய்...
''இது சம்பந்தமா, மத்திய, மாநில சுற்றுச் சூழல் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உள்ளூரை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர், போட்டோ ஆதாரங்களுடன் புகார் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''போலீசாரை பாடா படுத்துதாங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரின் மனைவி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டரா இருக்காங்க... இவங்க வீடு, கோவை கிணத்துக்கடவு பகுதியில் இருக்கு வே...
''இவங்க மகள், ஒத்தகால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் படிச்சிட்டு இருக்காங்க... பெண் டாக்டர், கோவையில் இருந்து தினமும் திருப்பூருக்கு ரயில்ல வந்துட்டு போறாங்க வே...
''அதே நேரம், தன் கணவர் செல்வாக்கை பயன்படுத்தி, கிணத்துக்கடவில் இருந்து கோவை ரயில் நிலையம் போகவும், வரவும், போலீசாரின் காரை உபயோகிக்கிறாங்க... தன் மகளையும் காலேஜுக்கு அந்த கார்ல அழைச்சிட்டு போக சொல்லுதாங்க வே...
''அது மட்டும் இல்ல... டாக்டர் தினமும் கார்ல வீட்டுக்கு போற வழியில, கடைகள்ல காரை நிறுத்தி டிபன், தின்பண்டங்கள் வாங்குதாங்க... இதுக்கு அவங்க பணமும் தர்றது இல்ல... காரை ஓட்டிட்டு வர்ற போலீசார் தான் கையில இருந்து தர வேண்டியிருக்கு வே....'' என்றார், அண்ணாச்சி.
''கூடுதல் துணை கமிஷனர் மேல ஏடாகூட புகார்கள் குவியுதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார்,அன்வர்பாய்.
''சென்னையை ஒட்டியிருக்கிற போலீஸ் கமிஷனரகத்துல பணிபுரியும் ஆயுதப்படை பெண் போலீசார், தங்களின் உயர் அதிகாரியான கூடுதல் துணை கமிஷனர் மேல பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்குறாங்க... அவருக்கு இணங்காத பெண் போலீசாருக்கு, வார விடுப்பு, தற்செயல் விடுப்பு, மிகை நேரம், உணவுப்படின்னு எதுவும் கிடைக்காம பண்ணிடுறாருங்க...
''அதே நேரம், தன்னை அனுசரிச்சு போற பெண் போலீசாருக்கு சலுகைகளை வாரி வழங்குறாருங்க... 'இவரது களியாட்டங்கள் சம்பந்தமா, அவரது ஆபீஸ் சிசிடிவி பதிவுகள், அவரது வாட்ஸாப் சாட்களை எடுத்து பார்த்தாலே, தெரியும்'னு சொல்றாங்க... இப்ப, அதிகாரி மேல துறை ரீதியான விசாரணை நடக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''ஜான்சன் இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் இடத்தை காலி செய்தனர்.

