/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அ.தி.மு.க., வேட்பாளரை விமர்சிக்காத தி.மு.க.,வினர்!
/
அ.தி.மு.க., வேட்பாளரை விமர்சிக்காத தி.மு.க.,வினர்!
அ.தி.மு.க., வேட்பாளரை விமர்சிக்காத தி.மு.க.,வினர்!
அ.தி.மு.க., வேட்பாளரை விமர்சிக்காத தி.மு.க.,வினர்!
PUBLISHED ON : ஏப் 14, 2024 12:00 AM

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட நண்பர்கள் மத்தியில், ''பேசிய பணத்தை தராம ஏமாத்திட்டாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த வியாபாரத்துல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''முழுசா கேளும்... காஞ்சிபுரம் தொகுதியில தி.மு.க., வேட்பாளரா செல்வம் போட்டியிடுறாரே... சமீபத்துல, அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி, வேட்பாளர் செல்வம் ஆகியோர் பெருமாட்டு நல்லுார், பாண்டூர், குமிழி, கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் பகுதிகள்ல ஓட்டு சேகரிச்சாங்க...
''இதுக்கு கூட்டம் சேர்க்க, அப்பகுதி தி.மு.க., நிர்வாகிகள், 'ஒரு மணி நேரத்துக்கு 300 ரூபாய் தர்றோம்'னு சொல்லி நிறைய பெண்களை அழைச்சுட்டு வந்து, ரோட்டு ஓரத்துல நிற்க வச்சாங்க... அவங்களும், ரெண்டு மணி நேரமா நின்னுட்டு இருந்தாங்க...
''ஆனா, கடைசியில கையில 200 ரூபாயை மட்டும் குடுத்து அனுப்பியிருக்காங்க... 'கொடுத்த வாக்குறுதியை தான் நிறைவேற்றாம இருக்காங்கன்னு பார்த்தா, பேசின பணத்தை கூட தர மாட்டேங்கிறாங்களே'ன்னு பெண்கள் புலம்பிட்டே போனாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை கேள்வி கேட்டு திணற அடிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''-பெரம்பலுார் தொகுதியில, தி.மு.க., வேட்பாளரா அமைச்சர் நேருவின் மகன் அருண் போட்டியிடுறாரே... இவருடன் பிரசாரத்துக்கு பெரம்பலுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகரன் கூடவே போறாரு பா...
''அவரை பார்க்கிற கிராம மக்கள்,'மூணு வருஷத்துக்கு முன்னாடி ஓட்டு கேட்டு வந்தீங்க... ஜெயிச்சதும் நன்றி சொல்லக் கூட வரல... தண்ணீர் பஞ்சம், பஸ் வசதி, ரோடுகள் சரியில்ல... இவ்வளவு நாளா எங்க போயிருந்தீங்க'ன்னு கேள்வி மேல கேள்வி கேட்கிறாங்க பா...
''வி.களத்துார்ல முஸ்லிம்கள் வசிக்கிற பகுதியில பிரசாரத்துக்கு போனப்பவும், எம்.எல்.ஏ.,விடம் சரமாரியா கேள்வி கேட்டாங்க... பிரசார வேன்ல இருந்து இறங்கி வந்த அருண், அவங்களை சமாதானப்படுத்தினாரு... அப்புறமா, அவரை மட்டும் மசூதிக்குள்ள அழைச்சுட்டு போய், ஓட்டு கேட்க வச்சு அனுப்பி வச்சாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பக்கத்துல இருக்கற திருச்சி தொகுதி கதையை கேளுங்க ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருச்சி அ.தி.மு.க., வேட்பாளரா, புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா போட்டியிடறாரோல்லியோ... இவரது சகோதரர் கரிகாலன், உறவினர்கள் ரத்தினம், ராமச்சந்திரன் எல்லாருமே காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள்ல மணல் எடுக்கிற உரிமத்தை தமிழக அரசிடம் வாங்கியிருக்கா ஓய்...
''வேட்பாளர் கருப்பையாவும் இதே தொழில்ல தான் இருக்கார்... போன அ.தி.மு.க., ஆட்சியிலயும் இவாதான் மணல் தொழில் பார்த்தா... அப்ப, இவாளை மணல் மாபியான்னு தி.மு.க.,வினர் திட்டினா ஓய்...
''ஆனா, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இவாளுக்கே தான் மணல் உரிமத்தை குடுத்தா... இதுல கரிகாலன், மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் ஓய்...
''இதனால, பிரசாரத்துக்கு போற தி.மு.க., வினர், கருப்பையா பற்றி எந்த விமர்சனமும் பண்ணாம அடக்கியே வாசிக்கறா... அதே நேரம், பா.ஜ., கூட்டணியில இருக்கற தினகரன், 'மணல் மாபியா'ன்னு அ.தி.மு.க., வேட்பாளர் தரப்பை விமர்சிக்கிறார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

