/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வடமாநில ' குடி ' மகன்களிடம் ' டபுள் ' வசூல்!
/
வடமாநில ' குடி ' மகன்களிடம் ' டபுள் ' வசூல்!
PUBLISHED ON : மார் 14, 2025 12:00 AM

இஞ்சி டீக்கு ஆர்டர் தந்தபடியே, “மகன் தான் மாவட்டச் செயலரா வலம் வர்றாருங்க...” என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“எந்த கட்சியில பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“நடிகர் விஜயின் த.வெ.க.,வுல, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் சட்ட சபை தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மாநகர மாவட்டச் செயலரா, சந்திரா என்ற பெண்ணை நியமிச்சிருக்காங்க... இவரது மகன் செந்தில்குமார், விஜய் மக்கள் நல இயக்கத்துல பொறுப்புல இருந்தாருங்க...
“இவர், திருச்சி கருமண்படம் பகுதியில், 'ஸ்பா' நடத்தி, விபசாரம் செய்த வழக்குல சிக்கியதால, இயக்கத்துல இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டாருங்க... அப்புறம் யார், யாரையோ பிடிச்சு, கட்சியில தன் அம்மாவுக்கு மாவட்டச் செயலர் பதவியை வாங்கிட்டாருங்க...
“ஆனா, இவர் தான் மாவட்டச் செயலர் போல நடந்துக்கிறாரு... பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, த.வெ.க., மகளிர் அணி சார்பில், சமீபத்துல திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்துச்சுங்க...
“இதுல, பங்கேற்ற பெண்கள் கையில வச்சிருந்த பேனர்கள்ல விஜய், பொதுச் செயலர் ஆனந்த் படங்களுடன் செந்தில்குமார் படமும் இருந்துச்சுங்க...
“இதை பார்த்த தி.மு.க.,வினர், 'முதல்ல செந்தில்குமாரிடம் இருந்து மகளிரை விஜய் காப்பாத்தட்டும்'னு சமூக வலைதளங்கள்ல கிண்டல் அடிச்சிட்டு இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
“மாவட்டச் செயலர் பதவி கேட்டு நெருக்கடி தரா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“எந்த கட்சி விவகாரம் பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“துாத்துக்குடி மாவட்டத்தில், 18 மீனவ கிராமங்கள்ல பரதவர் சமூகத்தினர் அதிகம் வசிக்கறா... குறிப்பா, துாத்துக்குடி சட்டசபை தொகுதியில் அதிகமா இருக்கா ஓய்...
“இதனால, தி.மு.க.,வுல தங்கள் சமூகத்துக்கு மாவட்டச் செயலர் பதவி வழங்கணும்னு கேக்கறா...
“இது சம்பந்தமா, அவா தரப்புல முதல்வருக்கு அனுப்பிய கடிதத்துல, 'பரதவர் சமுதாயத்தினருக்கு எந்த முக்கிய கட்சியும் மாவட்டச் செயலர் பதவி வழங்கல... அந்த குறையை தீர்க்கும் விதமா, எங்க சமூகத்துக்கு நீங்களாவது மாநகரச் செயலர் பதவி தரணும்'னு வலியுறுத்தியிருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“வடமாநில தொழிலாளர்களிடம், 'டபுளா' வசூலிக்காவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் டாஸ்மாக் கடை, அதிகம் விற்பனை யாகும் கடைகள்ல ஒண்ணு... இந்த ஏரியாவுல நிறைய வடமாநில தொழிலாளர்கள் இருக்கிறதால, இந்த கடையில வியாபாரம் அமோகமா நடக்கு வே...
“இங்க உள்ளூர்காரங்க மதுபானம் வாங்குனா, வழக்கம் போல குவார்ட்டர் பாட்டிலுக்கு கூடுதலா 10 ரூபாய் வாங்குற ஊழியர்கள், வடமாநில தொழிலாளர்களிடம் 20 ரூபாயை கறந்துடுதாவ... அவங்க, 'ஆப், புல்' பாட்டில்கள் வாங்குனா, 80 ரூபாய் வரைக்கும் கூடுதலா வசூல் பண்ணுதாவ வே...
“தமிழ் தெரியாத வடமாநில தொழிலாளர்கள் எதிர்த்து கேட்டாலும், அவங்களை தரக்குறைவா பேசி விரட்டி அடிச்சிடுதாவ... ஒரகடத்தை சுத்தி இருக்கிற டாஸ்மாக் கடைகள்லயும் இப்படித்தான் நடக்கு...
“இப்படி சம்பாதிச்ச பணத்துல, இந்த மாவட்டத்துல நாலு சூப்பர்வைசர்கள் குறுகிய காலத்துல கோடிகள்ல சொத்து சேர்த்துட்டதா, டாஸ்மாக் ஊழியர்களே புலம்புதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் காலியானது.