/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கோவில் அதிகாரியின் மவுன விரத நாடகம்!
/
கோவில் அதிகாரியின் மவுன விரத நாடகம்!
PUBLISHED ON : மே 23, 2024 12:00 AM

''முதல்வர் பதவிக்காக, ரெண்டு வருஷமா பூஜை பண்ணுதாங்க வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''அ.தி.மு.க., தகவலா பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த ஏத்தாப்பூரில், முத்துமலை முருகன் கோவில் வளாகத்தில், 146 அடி உயர முருகன் சிலை இருக்கு... இதுக்கு 2022 ஏப்ரல் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்துச்சு வே...
''பழனிசாமி இந்த கோவிலுக்கு வந்துட்டு போனதும் தான், பொதுச் செயலர் பதவி, வழக்குகளில் அவருக்கு சாதகமான தீர்ப்புகள் வந்துச்சாம்... அதனால, அவருக்கு ரொம்ப இஷ்ட தெய்வமா மாறிட்டு வே...
''இதனால, அரசியல் எதிரிகளை வீழ்த்தவும், மீண்டும் முதல்வராக வேண்டியும், பழனிசாமிக்காக இந்த கோவில்ல தினமும் குங்கும அர்ச்சனை நடக்கு... இதுக்கான ஏற்பாடுகளை, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., தான் செஞ்சிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''கோஷ்டிப்பூசல் காரணமா, ஆடியோக்களை ரிலீஸ் பண்றாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''அ.தி.மு.க.,வுல ஜெ., மறைவுக்கு பிறகு, மாவட்ட செயலர்கள் யாரும் மாற்றப்படலை... இதனால, அவங்க எல்லாம் குறுநில மன்னர்களா மாறிட்டாங்க...
''தங்களுக்கு வேண்டியவங்களுக்கு பதவிகள் தர்றதும், வேண்டாதவங்களை புறக்கணிக்கிறதுமா இருக்காங்க... இதனால, எல்லா மாவட்டங்கள்லயும் கோஷ்டிப்பூசல் அதிகமாகிடுச்சுங்க...
''சென்னையில இருக்கிற மூத்த மாவட்ட செயலர் ஒருத்தர், தன் வீட்டுல வேலைக்கு வந்த திருவண்ணாமலை பெண்ணிடம் அத்துமீறியிருக்கார்... பயந்து போன அந்த பெண், வீட்டை விட்டு ஓடி போயிடுச்சுங்க...
''அந்த பெண் வெளியில போய் ஏதும் சொல்லிட கூடாதுன்னு பயந்து போன செயலர், தன் கட்சியின் பெண் பிரமுகரிடம் பேசி, சமாதானப்படுத்தும்படி சொல்லியிருக்காரு... இந்த உரையாடல் ஆடியோக்கள் சமீபத்துல சோஷியல் மீடியாக்கள்ல வெளியானதுங்க...
''அந்த மாவட்ட செயலருக்கு ஆகாத, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் தான் அந்த பதிவை வெளியிட்டதா சொல்றாங்க... ஆடியோ வெளியாக காரணமா இருந்த அந்த பெண் நிர்வாகி, இன்னொரு மாவட்ட செயலர் குறித்தும், சில நிர்வாகிகளின் அந்தரங்க தொடர்புகள் குறித்தும் நிறைய பேசியிருக்காங்க... இந்த ஆடியோக்களும் அடுத்தடுத்து வெளியாகும்னு சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அதிகாரியின் நாடகத்தை கேளும் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர்ல பிரசித்தி பெற்ற கோவிலின் அதிகாரி ஒருத்தர், திடீர்னு மழை வேண்டி மவுன விரதம் இருந்திருக்கார்... ஆனா, அதுக்கான காரணம் வேறன்னு சொல்றா ஓய்...
''அதாவது, புதுசா பொறுப்பேற்ற அறங்காவலர் குழு, கணக்கு வழக்குகளை சரிபார்த்தப்ப, சில குளறுபடிகள் இருந்திருக்கு... இது சம்பந்தமா, அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருக்கா ஓய்...
''கொதிச்சு போன அதிகாரி, அவாளிடம் கடுமையா வாக்குவாதம் பண்ணியிருக்கார்... அதுவும் இல்லாம, 'பேசாம என்னை டிரான்ஸ்பர் பண்ணிடுங்கோ'ன்னும் குமுறியிருக்கார் ஓய்...
''அறங்காவலர் குழுவினரும், இது சம்பந்தமா இணை கமிஷனரிடம் முறையிட்டிருக்கா... இதனால, அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்கணும்கிறதுக்காக, மவுன விரதம் ஸ்டன்ட் அடிச்சிட்டார்னு கோவில் ஊழியர்கள் பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''சரவணா இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

