/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தேர்தல் பணியை உல்லாச டூராக மாற்றிய அதிகாரி!
/
தேர்தல் பணியை உல்லாச டூராக மாற்றிய அதிகாரி!
PUBLISHED ON : ஏப் 12, 2024 12:00 AM

''வடமாநில மக்களை காந்தம் மாதிரி கவர்ந்துட்டாங்க...'' என்றபடியே நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்துல மத்திய சென்னை, வட சென்னை, திருவள்ளூர் ஆகிய மூணு தொகுதி பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரிச்சு திறந்த ஜீப்புல பிரசாரம் செஞ்சாங்க... அப்ப, புரசைவாக்கத்துல கூடியிருந்த வடமாநில பெண்கள் எல்லாம் ஓடோடி வந்து, அவங்களுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டாங்க...
''அவங்க கூட ஜீப்புல இருந்த, முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் காயத்ரி தேவியும், மத்திய அமைச்சரிடம் கீழே இறங்கி நடக்கலாம்னு சொல்லியிருக்காங்க... ஆனா, போக்குவரத்து பாதிக்கும்னு போலீசார், அவங்களை கீழே இறங்க விடலைங்க...
''சென்னையில கிடைச்ச வரவேற்பால, அமைச்சர் உற்சாகமாகிட்டாங்க... அப்புறமா, பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் வீட்டுல நடந்த விருந்துல கலந்துக்கிட்டு கிளம்பி போனாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பான்னு புலம்பறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''நாகையை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி, திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வச்சிருக்கார்... இங்க, திருச்சி பெண் போலீஸ் ஒருவருடன், 'ஜாலி'யா இருக்கறது வழக்கம்... ரெண்டு பேருமே கல்யாணம் ஆனவா ஓய்...
''சமீபத்துல இவா ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள இருக்கறச்சே, பெண் போலீசின் குடும்பத்தார் வந்து கதவை வெளியில தாழ் போட்டு, அந்த பெண் வேலை பார்க்கற ஸ்டேஷனுக்கு தகவல் தந்துட்டா...
''போலீசார் வந்து கதவை திறக்கும்படி கேட்க, பெண் போலீஸ் கத்தியை எடுத்து, தற்கொலை மிரட்டல் விடுத்தாங்க... ஒரு வழியா சமாதானம் பேசி, ரெண்டு பேரையும் வெளியில வரவழைச்சா ஓய்...
''அதிகாரியோ, 'இது என் பர்சனல் மேட்டர்... இப்ப நான் லீவ்ல இருக்கேன்... எஸ்.பி., - ஐ.ஜி.,யிடம் பேசணுமா'ன்னு மிரட்டியிருக்கார்... போலீசாரோ, 'பெண் வீட்டார் புகார் சொன்னதால தான் வந்தோம்'னு சொல்லிட்டு போயிட்டா ஓய்...
''திரும்பி போறச்சே, 'தேர்தல் பரபரப்புல நாம லீவ் கிடைக்காம திண்டாடுறோம்... இவருக்கு மட்டும் யார் லீவ் தந்தா'ன்னு புலம்பிட்டே போனா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பாலகிருஷ்ணன் தள்ளி உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சி, ''தேர்தல் பணியை உல்லாச டூரா மாத்திட்டாருல்லா...'' என்றார்.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான பொது பார்வையாளரா, ராஜஸ்தானை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஒருத்தர் வந்திருக்காரு... இவரோட, இவரது பேமிலியும் கோடை விடுமுறையை கொண்டாட வந்துட்டு வே...
''தேர்தல் பணிக்காக அதிகாரிக்கு தந்த கார்ல சமீபத்துல இந்த குடும்பத்தினர், கொடைக்கானல் போயிட்டு வந்திருக்காவ... சர்க்யூட் ஹவுஸ்ல தங்கியிருக்கிற அதிகாரி, சாயந்தரமானா, 'சரக்கு' கேட்காரு வே...
''தேர்தல் பார்வையாளரை கவனிக்கிறதுல குறை வைக்கக் கூடாதுன்னு மாவட்ட அதிகாரி சொல்லிட்டாராம்... இதனால, வடமாநில அதிகாரிக்கு தினமும் உயர்ரக மதுபானங்கள், மட்டன், சிக்கன்னு தாராளமா அதிகாரிகள் சப்ளை பண்ணிடுதாவ...
''அதுவும் இல்லாம, டி - ஷர்ட், டிராக் பேன்ட்னு டிரஸ் ரகங்களை வாங்கிக் கொடுத்தும், பார்வையாளரை உள்ளூர் அதிகாரிகள் சிறப்பா கவனிச்சிக்கிடுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

