தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 3.5 ஏக்கர் குளம்!

ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 3.5 ஏக்கர் குளம்!

ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 3.5 ஏக்கர் குளம்!


PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ லக்காய் டீயை பருகியபடியே, ''நாய் மாதிரி விரட்டியடிக்கிறாங்க பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''யாரைங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில், காச நோய் தடுப்பு பிரிவு செயல்படுது... இங்க வர்ற நோயாளிகளை யாருமே மதிக்கிறது இல்ல பா...

''நாயை விரட்டுற மாதிரி விரட்டுறாங்க... காச நோயாளிகளுக்கு அரசு தர்ற உதவித்தொகைக்கு பரிந்துரைக்க பல மாசம் அலைக்கழிக்கிறாங்க பா...

''காச நோய் இருக்கான்னு பரிசோதனைக்கு வர்றவங்களையும், 'அங்க போங்க, இங்க போங்க'ன்னு சுத்தல்ல விடுறாங்க... அந்த நோயாளிகள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து எந்த அறிவுரையும் தர்றது இல்ல பா...

''இத்தனைக்கும், இந்த பிரிவில் துணை இயக்குநர் நிலையில் டாக்டர் ஒருத்தரும் இருக்காரு... இவர், தன் அறைக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிறாரே தவிர, வெளியில என்ன நடக்குதுன்னு கண்டுக்கிறதே இல்ல... இந்த பி ரிவுல சில அதிகாரிகள் போலி கணக்கெழுதி, அரசு பணத்தை, 'ஆட்டை' போட்டுட்டும் இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''கோர்ட் உத்தரவை மதிக்கிறதே இல்லைங்க...'' என்ற அந்தோணி சாமியே தொடர்ந்தார்...

''நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் நிலச்சரிவு அபாயம் காரணமா, பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தவும், பாறைகளை உடைச்சு விவசாய நிலங்களை சமன் செய்யவும் ஐகோர்ட் தடை விதிச்சிருக்கு... இந்த தடையை மீறி, பல பகுதிகளில் பாறைகளை உடைக்கிறதும், கட்டுமான பணிக்காக விவசாய நிலங்களை சமன் செய்றதும் நடக்குதுங்க...

''விவசாய பயன்பாட்டுக்குன்னு அனுமதி வாங்கிட்டு, ராவும், பகலும் கட்டுமான பணியில் ஈடுபடுறாங்க... இதனால எழும் சத்தத்தால, வன விலங்குகள் மிரண்டு போய் ஊருக்குள்ள வந்துடுதுங்க...

''இதெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிஞ்சிருந்தாலும், நிலத்தின் உரிமையாளர் களும், கட்டுமான ஒப்பந்ததாரர்களும், 'கவனிப்பு' பண்ணிடுறதால கமுக்கமா இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''குளமே காணாம போயிடுத்து ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''என்ன வே இது... 'கிணத்தை காணோம்'னு சொன்ன வடிவேலு காமெடி மாதிரி இருக்கே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''முழுசா கேளும்... திருச்சி மாவட்டம், மணப்பாறை -- விராலிமலை ரோட்டில், 3.5 ஏக்கரில் முனியவண்ணான்மடை என்ற குளம் இருந்துது... கிட்டத்தட்ட, 30 வருஷத்துக்கு முன்னாடி இந்த குளத்தின் நடுவில் இருந்த கிணறு தான், அந்த பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமா இருந்துது ஓய்...

''இன்னைக்கு கிணறு மட்டும் இருக்கு... சுத்தியிருந்த குளத்தை காணோம்... கிணத்தை சுற்றிலும் வீடுகளும், கட்டடங்களுமா கட்டி ஆக்கிரமிச்சுட்டா... அதுலயும், குளத்தின், 1 ஏக்கரை ஒரு தனியார் பள்ளி ஆக்கிரமிச்சு, காம்பவுண்ட் சுவரே கட்டிடுத்து ஓய்...

''பக்கத்துல இருக்கற சாய் நகருக்கு போறதுக்கு, குளத்துக்குள்ள உள்ளாட்சி அமைப்பு சார்புல சாலையே போட்டு குடுத்திருக்கா... இன்னைக்கு இந்த பகுதியில, 1 ஏக்கர் நிலம், 10 கோடி ரூபாய்க்கு மேல விலை போறது ஓய்...

''இந்த குளம் மாயமானது தெரியாம, மூணு வருஷத்துக்கு முன்னாடி குளத்தை சீரமைக்க, 1.50 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கியிருக்கு... அப்புறமா உண்மை தெரிய வர, அந்த நிதியில வேற ஒரு குளத்தை அதிகாரிகள் துார்வாரி கதையை முடிச்சுட்டா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

அரட்டை முடிய, நண்பர்கள் நகர்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us