PUBLISHED ON : ஏப் 09, 2026 04:05 AM

பெஞ்சில் அமர்ந்த கையுடன், ''கலெக்டர் மாற்றத்துக்கு காரணமாகிட்டாரு பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த மாவட்டத்துலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''துாத்துக்குடி கலெக்டரா இருந்தவர், இளம்பகவத்... தேர்தல் பணிகள்ல அஜாக்கிரதையா இருந்ததா, சமீபத்துல தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, இவரை காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பிட்டாங்க பா...
''ஆனா, கலெக்டரது உதவியாளரா இருந்த ஒரு அதிகாரி தான், தேர்தல் பணிகள்ல சொதப்பி, கலெக்டர் இடமாற்றத்துக்கு காரணமாகிட்டாராம்... கடந்த அஞ்சு வருஷமா, அந்த அதிகாரி ஒரே இடத்துல நங்கூரம் போட்ட மாதிரி உட்கார்ந்துட்டு, மூணு கலெக்டர்கள் மாற்றத்துக்கு காரணமா இருந்திருக்காரு பா...
''நீதிமன்ற நடுவர் பயிற்சி பணிக்காக, அந்த அதிகாரியை ஜனவரி மாசமே அனுப்பினாங்க... ஆனா, நீதிமன்றத்துல பயிற்சி எடுக்கிற மாதிரி கையெழுத்தை மட்டும் போட்டுட்டு, கலெக்டர் அலுவலகத்துக்கே வந்துடுறாரு பா...
''சிறப்பு நீதிமன்ற பயிற்சியை முழு நேரமா இருந்து முடிக்கணும்கிறது, வருவாய்த் துறையின் கண்டிப்பான விதி... 'அதை கண்டுக்காத இந்த அதிகாரி, கலெக்டரின் உதவியாளரா தொடர்ந்து செயல்படக் கூடாது'ன்னு சக அதிகாரிகள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மோகன்ராம் வரார்... சுக்கு காபி குடும் நாயரே...'' என்ற குப்பண்ணாவே, ''எதையாவது எழுதி குடுங்க... பில்லை, 'ஓகே' பண்றேன்னு சொல்லிட்டார் ஓய்...'' என்றார்.
''யாருப்பா அந்த அதிகாரி...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டசபை தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தும்படி, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் உத்தரவு போட்டிருந்தார்... பல்லடம் ஒன்றிய அதிகாரி, ஊராட்சி செயலர்களிடம் கணிசமா ஒரு தொகையை வசூல் பண்ணி, விழிப்புணர்வு நிகழ்ச்சியை, தடபுடலா நடத்தினார் ஓய்...
''இதுக்கு கொடுத்த தொகையை, எந்த கணக்குல எழுதறதுன்னு தெரியாம, ஊராட்சி செய லர்கள் முழியா முழிச்சிருக்கா... ஒன்றிய அதிகாரியோ, 'ஏதாவது ஒரு கணக்குல எழுதி, பில்களை அனுப்புங்கோ... நான் ஓகே பண்ணி அனுப்பிடறேன்'னு சொல்லிட்டார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ரமேஷ், இதையும் கேட்டுட்டு கிளம்பும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''காசை கண்ணுலயே காட்ட மாட்டேங்காவ வே...'' என்றார்.
''எந்த கட்சி வேட்பாளரை சொல்றீர் ஓய்...'' என பட்டென கேட்டார், குப்பண்ணா.
''சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மனோன்மணி... மாவட்ட செயலர் இளங்கோவன்கிட்ட, 'செலவை பத்தி கவலையில்ல'ன்னு சொல்லி, தன் மகன் டாக்டர் ஸ்ரீபாலாஜி சுகுமாருக்கு, 'சீட்' வாங்கிட்டாங்க வே...
''வேட்பாளர் அறிமுக கூட்டம், தேர்தல் அலுவலகம் திறப்பு, கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்திப்புன்னு, ஒன்றிய செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பல நிகழ்ச்சிகளை நடத்தினாங்க... ஆனா, எதுக்குமே வேட்பாளர் தரப்பு பணம் தரல வே...
''இது பத்தி, மாவட்ட செயலரிடம், கட்சி நிர்வாகிகள் புகார் சொல்லியிருக்காவ... அவரும், வேட்பாளர் தரப்பை கூப்பிட்டு, செலவு செய்யும்படி அறிவுரை குடுத்திருக்காரு... ஆனாலும், முன்னாள் எம்.எல்.ஏ., தரப்பு, காசு விஷயத்துல கறாரா இருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''ஆளுங்கட்சியினர், பொன் வைக்கற இடத்துல , இவா பூவாச்சும் வைக்கணுமோல்லியோ...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
