/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மின் ஒயரில் உரசிய லாரி 20 பைக்குகள் எரிந்து நாசம்
/
மின் ஒயரில் உரசிய லாரி 20 பைக்குகள் எரிந்து நாசம்
PUBLISHED ON : மார் 02, 2024 12:00 AM

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், மதகொண்டப்பள்ளியில், 'ஏத்தர் எனர்ஜி' என்ற தனியார் இருசக்கர மின்சார பைக்குகள் தயாரிக்கும் நிறுவனம் இயங்குகிறது.
இங்கிருந்து கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஜே.பி., நகரில் உள்ள டீலருக்கு வழங்குவதற்காக, 40 மின்சார பைக்குகளை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி நேற்று மதியம் புறப்பட்டது.
கர்நாடகா மாநிலம், ஷிவமோகா பகுதியை சேர்ந்த சஞ்சீவ் ருத்ரப்பா, 26, என்பவர் லாரியை ஓட்டினார்.
ஓசூர் அருகே உளிவீரனப்பள்ளி பகுதியில் மதியம், 3:00 மணிக்கு சென்ற போது, எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க, டிரைவர் சாலையில் இருந்து லாரியை கீழே இறக்கினார்.
அப்போது, சாலையின் மேலே சென்ற மின்சார ஒயர் லாரியில் உரசி தீப்பிடித்தது. இதில், லாரியின் மேல் அடுக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் தீப்பிடித்து எரிய துவங்கின.
ஓசூர், தேன்கனிக்கோட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 20 பைக்குகள் எரிந்து நாசமாகின. கீழடுக்கில் இருந்த 20 பைக்குகள் தப்பின.
டிரைவர் சஞ்சீவ் ருத்ரப்பா லாரியை நிறுத்தி, இறங்கியதால் உயிர் தப்பினார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

