PUBLISHED ON : ஆக 05, 2026 12:00 AM

“தி.மு.க., ஆட்சி மாதிரியே, இப்பவும் அதே செல்வாக்குல இருக்காருங்க...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
“யாரு வே அது...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“தமிழக அரசின் நீர்வளத் துறை செயலரா இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சத்தியபிரதா சாஹுவை சமீபத்துல காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பிட்டு, பிரசாந்த் எம்.வடநேரே என்ற அதிகாரியை, அந்தப் பதவிக்கு நியமிச்சாங்க... பிரசாந்த் ஏற்கனவே ஊரக வளர்ச்சித் துறை செயலராகவும் இருக்கிறதால, அதே பொறுப்பையும் கூடுதலா கவனிப்பார்னு அறிவிச்சிருக்காங்க...
“இப்படி, ஒரே அதிகாரியிடம் ரெண்டு முக்கிய துறைகளை குடுத்ததுக்கு, ஒரு பின்னணி இருக்கு... அதாவது, தி.மு.க., ஆட்சியில் அமைச்சரா இருந்த துரைமுருகனுக்கு நெருக்கமாகி, நீர்வளத் துறையை ஆட்டிப் படைச்ச அதிகாரி, இப்பவும் இந்தத் துறையில பழைய செல்வாக்கு குறையாம இருக்காருங்க.. .
“இவர் தான், தலைமைச் செயலகத்தில் இருக்கிற முக்கிய அதிகாரியிடம் பேசி, இந்த இடமாறுதலை பண்ணிட்டதா கோட்டை வட்டாரத்து ல பேசிக்கிறாங்க...” என்றார் அந்தோணிசாமி.
“பொதுப்பணித் திலகம், இப்படி உட்காருங்க... உங்க நண்பர் அண்ணாதுரை வரலையா...” என, நண்பரிடம் விசாரித்த அன்வர்பாயே, “விவசாய பயன்பாடுன்னு சொல்லி, மண்ணை கொள்ளை அடிக்கிறாங்க பா...” என்றார்.
“எந்த ஊர்ல ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.
“ராமநாதபுரம் மாவட்டத்தில், விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் பயன்பாட்டுக்காக கண்மாய்கள், ஊருணிகள்னு 4,000 நீர் நிலைகள்ல மண் அள்ள, 'ஆன்லைனில்' பதிவு செஞ்சவங்களுக்கு, தாசில்தார் மூலமா அனுமதி குடுக்கிறாங்க... ஆனா, விவசாயிகள் பெயர்ல அனுமதி வாங்குற பலர், உள்ளூர் வி.ஏ.ஓ., மற்றும் தாசில்தார்கள் துணையுடன், குறிப்பிட்ட அளவுக்கு மேல மண்ணை அள்ளி வித்து, கொள்ளை லாபம் பார்க்கிறாங்க பா...
“கலெக்டர் நடத்தும் வாராந்திர குறைதீர் கூட்டத்துல, மண் கொள்ளை சம்பந்தமா ராமநாதபுரம், பரமக்குடி தாசில்தார்கள் மீது, விவசாய சங்க நிர்வாகிகள் பலரும் புகார்கள் சொல்றாங்க... இப்படி புகார் தெரிவிக்கிற நிர்வாகிகளுக்கு, மண் கடத்தல் கும்பல், சில லட்சங்களை அள்ளிவிட்டு, 'ஆப்' பண்ணிடுது பா...” என்றார் அன்வர்பாய்.
“பண மழையில குளிக்கறார் ஓய்...” என்றார் குப்பண்ணா.
“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.
“சென்னை மயிலாப்பூர், சட்டம் - ஒழுங்கு பிரிவுல, ஒரு போலீஸ் அதிகாரி இருக்கார்... இவர், தன் ஏரியாவுல, 24 மணி நேர மது விற்பனை, கஞ்சா, ஒரு நம்பர் லாட்டரின்னு, எல்லா சட்டவிரோத செயல்களுக்கும், 'பர்மிஷன்' குடுத்திருக்கார் ஓய்...
“இதனால, இவரது காட்டுல பணம் அடைமழையா கொட்டறது... அதேநேரம், இந்தத் தொழில்களை செய்றதா, அப்பாவிகள் சிலர் மேல பொய் வழக்கு போட்டு, அவாகிட்டயும் குறிப்பிட்ட தொகையைக் கறந்துடறார் ஓய்...
“குற்றச் சம்பவங்கள்ல ஈடுபட்டு, திருந்தி வாழ்ந்த ஒருத்தர் மீது பொய் வழக்கு போட்டு, அவரது குடும்பத்தை நடுத்தெருவுல நிறுத்திட்டார்... 'இவரால, நேர்மையான போலீசாருக்கும் கெட்ட பெயர்'னு சொல்ற மயிலாப்பூர் மக்கள், 'இந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கணும்'னு, அரசுக்கு மனு அனுப்பியிருக்கா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
டீ கடை ரேடியோவில் ஒலித்த, 'கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்' பாடலை சில நிமிடங்கள் ரசித்து கேட்ட பின், பெரியவர்கள் கிளம்பினர்.
