/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பில் தொகை வழங்க ' கட்டிங் ' கேட்கும் இருவர் அணி!
/
பில் தொகை வழங்க ' கட்டிங் ' கேட்கும் இருவர் அணி!
பில் தொகை வழங்க ' கட்டிங் ' கேட்கும் இருவர் அணி!
பில் தொகை வழங்க ' கட்டிங் ' கேட்கும் இருவர் அணி!
PUBLISHED ON : ஜன 30, 2026 03:18 AM

பெஞ்சில் அமர்ந்த கையுடன், ''ஊட்டிக்கு குறி வச்சுருக்கா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த கட்சியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''ஊட்டி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், பெரும் பாலும் காங்., கட்சி தான் போட்டியிடறது... இந்த தொகுதியில் கிறிஸ்துவர்கள் ஓட்டு நிறைய இருக்கு ஓய்...
''இந்த ஓட்டுகள், நடிகர் விஜயின், த.வெ.க.,வுக்கு போயிடாம தடுக்க, இந்த முறை தி.மு.க.,வே களமிறங்க முடிவு பண்ணிடுத்து... இதுக்காக, ஊட்டி நகர தி.மு.க., செயலரான ஜார்ஜ் ஏற்பாட்டுல, ஒரு மத போதகர் தலைமையில், ரெண்டு நாள் அற்புத பெருவிழாவை நடத்தியிருக்கா ஓய்...
''இதுல, ஒரு லட்சம் கிறிஸ்துவர்கள் கலந்துண்டா... அதுவும் இல்லாம, ஊட்டியில இருக்கற சிறுபான்மையினர் புனித பயணம் போறதுக்கும் ஜார்ஜ் உதவிகள் பண்றார் ஓய்...
''இதனால, இங்க ஜார்ஜையே வேட்பாளரா நிறுத்த தலைமை முடிவு பண்ணிட்டதா, ஆளுங்கட்சியினர் உற்சாகத்துல இருக்கா... அதே நேரம், காங்., தரப்பு கடுப்புல இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பழைய அதிகாரியின் ஆதிக்கம் நீடிக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., சார்பில், அடுத்த, 25 வருஷங்களுக்கான மாஸ்டர் பிளானை தயாரிச்சிட்டு இருக்காங்க... இதுக்கு பல கோடி ரூபாய் செலவுல கூடுதல் அதிகாரிகள், ஊழியர்களை நியமிச்சும், வேலை இன்னும் முடியல பா...
''ஏன்னா, மாஸ்டர் பிளான் தயாரிக்கிறதுல, ஏற்கனவே, சி.எம்.டி.ஏ.,வில் இருந்துட்டு, இடமாறுதல்ல டில்லிக்கு போன அதிகாரியின் தலையீடு இருக்காம்... இது சம்பந்தமா நடக்கிற எல்லா ஆலோசனை கூட்டங்கள்லயும், 'ஆன்லைன்' வாயிலா டில்லி அதிகாரியும் ஆஜராகி, ஏகப்பட்ட உத்தரவுகளை போடுறாரு... இதனாலயே, மாஸ்டர் பிளான் பணிகள் மந்தமா நடக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
மொபைல் போனை பார்த்த அந்தோணிசாமி, ''அன்சுல் மிஸ்ரா, மெசேஜ் பண்ணியிருக்காரு...'' என முணுமுணுத்தபடியே, ''கட்டாய வசூல் பண்றாங்க...'' என்றார்.
''யாரை சொல்லுதீரு...'' என கேட்டார், அண்ணாச்சி.
''திருவள்ளூர் மாவட்டத்தில், பிரபலமுருகன் கோவில் ஊர்ல, கால்நடை துறையின் உதவி இயக்குநர் அலுவலகம் இருக்கு... இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 25 கால்நடை மருந்தகங்கள், ஐந்து கிளை நிலையங்கள் இருக்குதுங்க...
''இங்க வேலை செய்யும் உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள் எல்லாம், டி.ஏ., சரண்டர் விடுப்பு, கூடுதல் பொறுப்பு பணி, துறை சார்ந்த திட்ட பணிகளுக்கு அரசு அனுமதித்த பில் தொகையை வழங்கும்படி, உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறாங்க...
''அங்க இருக்கிற உதவியாளர், கண்காணிப் பாளர்னு ரெண்டு பேர் சேர்ந்து, ஒவ்வொரு பில்லுக்கும், 1,000 முதல், 2,000 ரூபாய் வரை, 'கட்டிங்' தந்தால் தான், பில்கள்ல உதவி இயக்குநரிடம் கையெழுத்து வாங்கி, கருவூலத்துக்கு அனுப்புறாங்க...
''கட்டிங் தராம விட்டுட்டா, அவங்க பில்களை மாசக்கணக்குல பெண்டிங்ல போட்டுடுவாங்க... யாராவது தட்டிக் கேட்டா, 'இந்த பணம் எங்களுக்கு இல்ல... கருவூல அதிகாரிக்கும், ஊழியர்களுக்கும் தான் வாங்குறோம்'னு கூசாம சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''செல்வம், ராஜேந்திரன் இங்கன உட்காருங்க வே...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

