தனிநபருக்காக மாற்றப்பட்ட ஆவின் 'டெண்டர்' விதிகள்!
தனிநபருக்காக மாற்றப்பட்ட ஆவின் 'டெண்டர்' விதிகள்!
PUBLISHED ON : மே 21, 2026 12:00 AM

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, “பெரம்பலுார் கலெக்டர் மிருணாளினி பத்தி, போன 16ம் தேதி பேசியிருந்தோமே... அவங்க, 'தேர்தல் பணிகள்ல நேர்மையா பணியாற்றினேன்... பறக்கும் படை ஆய்வுகள்ல என் பணிகளை யாரும் குறை சொல்ல முடியாது... தேர்தல் செலவுகள்லயும் எந்த முறைகேடும் நடக்கல... நான் உட்பட எல்லா அதிகாரிகளுமே நடுநிலையாவே செயல்பட்டோம்'னு சொல்லியிருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
உடனே, ''இந்த அரசிலும், 'ஸ்டிக்கர்' ஒட்டும் வேலைதான் நடக்கு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“சமீபத்தில் முதல்வரா பதவியேற்ற விஜய், பெண்கள் பாதுகாப்புக்குன்னு தனியா, 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' அமைக்கும் உத்தரவை போட்டாருல்லா... இதன்படி பல நகரங்கள்லயும், ஒரு பெண் எஸ்.ஐ., தலைமையில், சிங்கப்பெண் அதிரடிப்படை அமைச்சிருக்காவ வே...
“இவங்களுக்கு, கடந்த தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட, 'பிங்க்' நிற ரோந்து வாகனங்களை தான் ஒதுக்கியிருக்காவ... இந்த பிங்க் வாகனங்கள், அ.தி.மு.க., ஆட்சியில், 'அம்மா ரோந்து படை'ங்கிற பேர்ல வலம் வந்துச்சு... இப்ப, 'சிங்கப்பெண் அதிரடிப்படை'ன்னு ஸ்டிக்கரை மாத்தி ஒட்டி, வலம் வருது வே...” என்றார், அண்ணாச்சி.
“மேயர் பதவிக்கு குறி வச்சிருக்காங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“துாத்துக்குடி மத்திய மாவட்ட த.வெ.க., செயலரா, சாமுவேல்ராஜ் என்பவர் இருக்காரு... இவரது சகோதரர் விஜயசீலன் காங்., மற்றும் த.மா.கா.,வில் மாவட்ட தலைவரா இருந்து, 2021 சட்டசபை மற்றும் 2024 லோக்சபா தேர்தல்கள்ல போட்டியிட்டு தோத்து போய், சமீபத்துல த.வெ.க.,வுக்கு வந்துட்டாருங்க... இவரது மற்றொரு சகோதரர் பொன்சீலன், தி.மு.க.,வுல இருக்காருங்க...
“இதுல சாமுவேல்ராஜ், இந்த தேர்தல்ல துாத்துக்குடி தொகுதியை கேட்டும் கிடைக்கல... இதனால, வர்ற உள்ளாட்சி தேர்தல்ல துாத்துக்குடி மேயர் பதவியை எப்படியாவது பிடிச்சுடணும்னு சாமுவேல்ராஜும், விஜயசீலனும் காய் நகர்த்திட்டு இருக்காங்க... கட்சி சார்பில் நடக்கிற எல்லா கூட்டங்கள்லயும், 'அடுத்த மேயர் சாமுவேல்ராஜ் தான்'னு அவரது ஆதரவாளர்கள் சொல்லிட்டு இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
“தனிப்பட்ட நபருக்காக, 'டெண்டர்' விதிகளை மாத்தியிருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“எந்த துறையில பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“கோவையில், ஆவின் பால் பொருட்களை எடுத்துண்டு போற வாகனங்களை, டெண்டர் விட்டுதான் தேர்வு பண்றா... இதுக்கு முந்தைய டெண்டர்கள்ல, 'தினமும் 200 கி.மீ., இயக்கணும், ஓட்டுநர் மற்றும் லோடு ஏற்றும் பணியாளர்களை சொந்த பொறுப்பில் நியமிக்கணும்'னு பொதுவான நிபந்தனைகள் தான் இருந்துது ஓய்...
“ஆனா, இப்ப ஆவின் முக்கிய அதிகாரிக்கு நெருக்கமா இருக்கும், பிரபல நடிகர் பெயர் கொண்டவருக்கு சாதகமா பல விதிகளை மாத்திட்டா... இதன்படி, 'டெண்டர் கேட்பவரின் ஆண்டு வருவாய், 10 லட்சம் ரூபாயா இருக்கணும்... தனிநபர்கள், ரெண்டு வாகனங்களுக்கு மேல டெண்டர் எடுக்க முடியாது... ஆனா, 'டிரான்ஸ்போர்ட்' நடத்தறவா, எத்தனை வாகனங்கள் வேணும்னாலும் டெண்டர் எடுத்துக்கலாம்'னு சொல்லியிருக்கா ஓய்...
“இது எல்லாமே, நடிகர் பெயர் கொண்டவர் டெண்டர் எடுக்க வசதியா கொண்டு வந்திருக்கா... இவரது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கார்ல தான், ஆவின் அதிகாரி அவருடன் அடிக்கடி வலம் வரார் ஓய்...” என, முடித்தார் குப்பண்ணா.
“வாரும் சண்முகம்... உம்ம சேக்காளி விஷால் இப்பதான் கிளம்பினாரு வே...” என, நண்பரிடம் அண்ணாச்சி கதை பேச, மற்றவர்கள் கிளம்பினர்.
