/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க துடிக்கும் அ.தி.மு.க., புள்ளி!
/
ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க துடிக்கும் அ.தி.மு.க., புள்ளி!
ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க துடிக்கும் அ.தி.மு.க., புள்ளி!
ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க துடிக்கும் அ.தி.மு.க., புள்ளி!
PUBLISHED ON : பிப் 06, 2026 03:24 AM

பில்டர் காபியை பருகியபடியே, ''மதுரை மாநகராட்சி பஞ்சாயத்தை கேளுங்கோ ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''இந்த மாநகராட்சியில் சொத்து வரி நிர்ணயத்தில், 150 கோடி ரூபாய் வரை ஊழல் பண்ணிட்டதா புகார்கள் எழுந்து, தி.மு.க., மேயர் இந்திராணி, நாலு மாசத்துக்கு முன்னாடி ராஜினாமா பண்ணிட்டாங்கல்லியோ... தி.மு.க.,வில், இன்னும் புதிய மேயரை தேர்வு செய்யல ஓய்...
''கூட்டணி கட்சியான, மார்க்சிஸ்ட் கம்யூ.,வின் துணை மேயர் நாகராஜன் தலைமையில் தான் நிர்வாகம் நடக்கறது... அவர் தலைமையில் மன்ற கூட்டத்தை நடத்த, தி.மு.க.,வினர் விரும்பாததால, மூணு மாசமா கூட்டமே நடக்கல ஓய்...
''இந்த சூழல்ல, 'மாநகராட்சி கூட்டத்தை ஏன் நடத்தல'ன்னு ஐகோர்ட்டே கேள்வி கேட்டுட்டதால, வர்ற 10ம் தேதி கூட்டத்தை நடத்த முடிவு செஞ்சிருக்கா ஓய்...
''ஆனாலும், நாகராஜன் தலைமையில் கூட்டம் நடக்கறதை விரும்பாத, தி.மு.க., கவுன்சிலர்கள், '10ம் தேதிக்குள்ள புதிய மேயரை தேர்வு பண்ணுங்கோ... இல்லாட்டி, கூட்டத்தை ஒட்டுமொத்தமா புறக்கணிச்சுடறோம்'னு தலைமைக்கு தகவல் அனுப்பி யிருக்கா...
''ஆனா, 'ஆளுங்கட்சியா இருந்துண்டு, மாநகராட்சி கூட்டத்தை புறக்கணிச்சா, மக்கள் மத்தியில நமக்கு தான் கெட்ட பெயர்'னு கட்சியின் மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வசூல் வேட்டை நடத்துறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, புரசைவாக்கம் போலீசார் குடியிருப்பில் மொத்தம், 136 வீடுகள் இருக்கு... இதன் பொறுப்பாளரா, ஏட்டு ஒருத்தர் இருக்காருங்க...
''இவர் ஒவ்வொரு வீட்டுக்கும் பராமரிப்பு கட்டணமா, தலா 200 வீதம், மாசம், 27,200 ரூபாயை வசூல் பண்றாரு... இதுல, குடிநீர் மோட்டார் போடுறவருக்கு மாசம், 12,000 ரூபாய் சம்பளமா தர்றாருங்க... மீத பணம் ஏட்டு பாக்கெட்டுக்கு போயிடுதுங்க...
''இது போக, குடியிருப்புக்குள்ளயே போலீசாரின் கார்களை நிறுத்த, 'பார்க்கிங்' வசதி செஞ்சு குடுத்து, அதுக்கும் கணிசமான தொகையை கறந்துடுறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஜெயபால், தள்ளி உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சி, ''ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்க பார்க்காருல்லா...'' என்றபடியே தொடர்ந்தார்...
''சிவகங்கை மாவட்டத்தில், நாலு சட்டசபை தொகுதிகள் இருக்கு... மாவட்ட அ.தி.மு.க.,வின் முக்கிய புள்ளிக்கும், உள்ளூரை சேர்ந்த மீசைக்கார அமைச்சருக்கும், மணல் குவாரி தொழில் தொடர்பு இருக்கு வே...
''இந்த சூழல்ல, சமீபத்துல சென்னைக்கு போன மாவட்ட புள்ளி, தன் தலைவர் பழனிசாமியை பார்த்து, நாலு தொகுதிகளுக்கான தேர்தல் செலவுக்கு பணம் கேட்டிருக்காரு... கோபமான பழனிசாமி, 'நீங்க தானே மாவட்ட பதவியில இருக்கீங்க... திருப்பத்துார், மானாமதுரைன்னு ரெண்டு தொகுதி செலவை நீங்க தான் ஏத்துக்கணும்'னு சொல்லி அனுப்பிட்டாரு வே...
''நொந்து போன மாவட்ட புள்ளி, 'இவர் முதல்வராக, நான் செலவு செய்யணுமா'ன்னு புலம்புதாரு... அதோட, திருப்பத்துார் தொகுதியை கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு தள்ளிவிடவும் பார்க்காரு வே...
''அதாவது, லோக்கல் அமைச்சர் ஜெயிக்க உதவிய மாதிரியும் இருக்கும்... தனக்கும் தேர்தல் செலவும் குறையும்னு ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்க பார்க்காரு வே... '' என முடித்தார், அண்ணாச்சி.
''செந்தில்நாதன், பெரிய கருப்பன் வரா... அவாளுக்கு சூடா சுக்கு காபி குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

