/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கூடுதல் பொறுப்பில் வாரி குவிக்கும் அதிகாரி!
/
கூடுதல் பொறுப்பில் வாரி குவிக்கும் அதிகாரி!
PUBLISHED ON : மார் 11, 2026 01:41 AM

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''சிறுபான்மையினர் எல்லாருமே குறி வைக்கிறாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த தொகுதிக்கு வே...'' என, பட்டென கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதியில், தொடர்ந்து அஞ்சு முறை தி.மு.க., ஜெயிச்சிருக்கு... சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இந்த தொகுதியை, தி.மு.க.,வின் கோட்டைன்னே சொல்றாங்க பா...
''இதனால, தி.மு.க., கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ., ஆகிய மூணு முஸ்லிம் கட்சிகளும் இத்தொகுதிக்கு குறி வச்சிருக்காங்க... அதே நேரம், இப்ப இந்த தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்கிற அப்துல் வகாப் மீண்டும் களமிறங்க விரும்புறாரு பா...
''இவருக்கு போட்டியா, தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரியத்தின் உறுப்பினர் மீரான், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்வாடி சித்திக் ஆகியோரும், சீட்டை கைப்பற்ற களத்துல குதிச்சிருக்காங்க... இதுல, 'முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவு இருக்கிறவருக்கு தான் சீட் கிடைக்கும்'னு உள்ளூர் தி.மு.க.,வினர் பேசிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தி.மு.க., - காங்., கூட்டணிக்கு ஒட்டு போட்டவர் கதையை கேளுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த ஒருத்தர், டில்லியில் வசிக்கிறாரு... போன அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்துல செல்வாக்கா வலம் வந்தாருங்க...
''அவர் சொல்ற ஆட்களுக்கு தான் டெண்டர்கள் எல்லாம் குடுத்தாங்க... இவரது மகன் தான், உடைய இருந்த தி.மு.க., - காங்., கூட்டணியை ஒட்ட வச்சிருக்காருங்க...
''கர்நாடகாவைச் சேர்ந்த அகில இந்திய காங்., முக்கிய புள்ளியிடம் பேசி, செய்ய வேண்டியதை செஞ்சு, தி.மு.க., கொடுத்த சீட்களுக்கு காங்கிரசை சம்மதிக்க வச்சிருக்காரு... கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும்போதும் கூடவே இருந்திருக்காருங்க...
''அவரை, முதல்வருக்கு கனிமொழி அறிமுகம் பண்ணி வச்சிருக்காங்க... இந்த காட்சிகளை, அவரது அப்பா வீட்டுல இருந்து, 'டிவி'யில் பார்த்து, சந்தோஷப்பட்டிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''வாங்க முரளி... உங்க மகன் ரோகன் ஊருக்கு போயிட்டாரா ஓய்...'' என, நண்பரிடம் விசாரித்த குப் பண்ணாவே, ''வசூல்ல புகுந்து விளையாடறார் ஓய்...'' என்றார்.
''யாரு வே அது...'' என கேட்டார், அண்ணாச்சி.
''திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒன்றரை வருஷமா அதிகாரியே இல்ல... இதனால, தெற்கு வட்டார அதிகாரி தான், கூடுதல் பொறுப்பா வடக்கையும் கவனிக்கறார் ஓய்...
''மினி பஸ்களுக்கு ரூட் மாற்றம் ஒப்புதல் வழங்க, லட்சக்கணக்குல, 'கட்டிங்' வாங்கறார்... சமீபத்தில், கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு மினி பஸ் ரூட்களை மாத்த, பெரிய தொகையை கறந்துட்டார்... இதுபோக வழக்கமான லைசென்ஸ், தகுதி சான்றிதழ்களுக்கு, 'டார்க்கெட் பிக்ஸ்' பண்ணி, வசூல்ல கொழிக்கறார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''வெங்கிடுசாமி, இங்கன உட்காரும்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

