தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 3 மாதங்களில் 1.02 லட்சம் பட்டா மாறுதலுக்கு ஒப்புதல்

3 மாதங்களில் 1.02 லட்சம் பட்டா மாறுதலுக்கு ஒப்புதல்

3 மாதங்களில் 1.02 லட்சம் பட்டா மாறுதலுக்கு ஒப்புதல்


PUBLISHED ON : மே 08, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:கடந்த மூன்று மாதங்களில், 1.02 லட்சம் பேருக்கு தானியங்கி முறையில், பட்டா மாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் பத்திரப்பதிவு முடிந்தவுடன், பட்டா பெயர் மாற்றத்துக்காக, தாலுகா அலுவலகத்துக்கு அலைய வேண்டியுள்ளது. அதனால், அந்த பணிகளை எளிமைப்படுத்த பதிவுத்துறையும், வருவாய்த் துறையும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அளக்க தேவையில்லை

இந்த வகையில், ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தும் விற்பனை செய்யப்படும் நிலையில், அதற்கான பட்டா மாறுதலில், நிலத்தை அளக்க வேண்டிய தேவை எழாது. இதில், நிலத்தை அளந்து உட்பிரிவு எண் உருவாக்க வேண்டியதில்லை என்பதால், பட்டா மாறுதலை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, பத்திரப்பதிவு நிலையில், சொத்து விற்பவர் பெயரில் இருக்கும் பட்டாவை, சொத்து வாங்கும் நபர் பெயருக்கு மாற்றும் பணிகளை, தானியங்கி முறையில் மேற்கொள்ளும் திட்டம், 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், சொத்தின் பழைய, புதிய உரிமையாளர்களின் அடையாள சான்றுகளை சரிபார்த்து, சார் - பதிவாளர் ஒப்புதல் அளித்தால் போதும்.

அதன் அடிப்படையில், பட்டாவில் பெயர் மாற்றம் தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படும்.

ஒப்புகை சீட்டு

இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சொத்து விற்பனையில், உட்பிரிவு உருவாக்க வேண்டிய தேவை இல்லாத இனங்களில், தானியங்கி பட்டா மாறுதல் மேற்கொள்ளப்படும். பத்திரப்பதிவின்போதே பட்டா மாறுதலுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு, ரசீது, ஒப்புகை சீட்டு போன்றவை வழங்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில் பட்டாவில் பெயர் மாற்றம் ஏற்பட்டவுடன், அது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, இ - மெயில் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்.

தற்போது, நடப்பு ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டும், 1.02 லட்சம் பட்டா மாறுதலுக்கு, சார் - பதிவாளர் அலுவலகங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us