/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சாய்பாபா கோவில் பக்கத்தில் 'சரக்கு' விடுதி!
/
சாய்பாபா கோவில் பக்கத்தில் 'சரக்கு' விடுதி!
PUBLISHED ON : ஜன 19, 2024 12:00 AM

''ஆளுங்கட்சி புள்ளி மட்டும் தப்பிச்சிட்டாரு பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''என்ன விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது தொடர்பா, சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவர், கருக்கலைப்புக்கு உதவிய அரசு மருத்துவமனை நர்ஸ் மற்றும் ஒருவர்னு, மூணு பேரை போலீசார் கைது செஞ்சாங்க பா...
''இந்த விவகாரத்தில், ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருத்தர் சம்பந்தப்பட்டிருக்காராம்... அவர், சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை மிரட்டி, பல லட்சம் ரூபாயை கறந்திருக்காரு பா...
''இது போலீசாருக்கு தெரிஞ்சும், அவரை வழக்குல சேர்க்காம, குறிப்பிட்ட தொகையை வாங்கிட்டு, அவரை விட்டுட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மோகன், இந்த பேப்பரை அங்க வையும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சி, ''கவரை மாத்தி குடுத்து, வாங்கி கட்டிக்கிட்டாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கோவையை சேர்ந்த தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ஒருத்தர், அணியுற சட்டையில ரெண்டு பாக்கெட் இருக்கும்...
''வீட்டுல இருந்து கிளம்புறப்ப, ஒரு பாக்கெட்டுல, சுப நிகழ்ச்சிகளுக்கு கொடுக்க வேண்டிய மொய் கவர்களை வச்சிருப்பாரு... இன்னொரு பாக்கெட்டுல, துக்க காரியங்களுக்கு கொடுக்க வேண்டிய கவர்களை வச்சிருப்பாரு வே...
''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கட்சி நிர்வாகி வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு போயிருக்காரு... நிர்வாகியை கட்டிப்பிடிச்சு உருக்கமா ஆறுதல் சொல்லிட்டு, வாழ்த்து வாசகங்கள் அடங்கிய கல்யாண மொய் கவரை குடுத்துட்டு வந்துட்டாரு வே...
''இது, வீட்டுக்கு போனதும் தான் அவருக்கு தெரிஞ்சிருக்கு... உடனே, துக்க வீட்டு நிர்வாகிக்கு போன் போட்டு, தகவலை சொல்லியிருக்காரு... இதை கேட்டு டென்ஷனான அந்த நிர்வாகி, பணத்தோடு கவரை திருப்பிக் கொடுத்துட்டு, 'உன் சகவாசமே வேணாம்'னு திட்டிட்டு போயிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''சண்முகசுந்தரம் இப்படி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''சாய்பாபா கோவிலுக்கு பக்கத்துல, 'சரக்கு' கடையை திறந்து வச்சிருக்காங்க...'' என்றார்.
''எங்க ஓய் இந்த அநியாயம்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்துல ஷீரடி சாய்மந்திர் கோவில் இருக்குது... இந்த கோவிலுக்கு பக்கத்துல, சுற்றுலா சங்கத்தின் அனுமதி பெற்ற மதுபான விடுதி செயல்படுதுங்க...
''சாய்பாபா கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் நிறைய வருதுங்க... மதுபான விடுதியிலிருந்து கேட்கும் பாப் இசை, 'குடி'மகன்களின் ஆட்டம், பாட்டம், பக்தர்களின் காது ஜவ்வை கிழிக்கிற அளவுக்கு கொடுமையா இருக்குதுங்க...
''மதுபான விடுதியை அகற்றணும்னு, அப்பகுதி பொதுமக்கள், கோவில் அறங்காவலர்கள் மனு குடுத்தும், 'டாஸ்மாக்' நிர்வாகம் கண்டுக்கலைங்க... இதனால, சீக்கிரமே போராட்டம் நடத்த அந்த பகுதி மக்கள் முடிவு பண்ணியிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''அண்ணாமலை அங்க போய் போராடினா, பிரச்னை தீர்ந்துடும் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

