/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கோவில் திருப்பணிகளில் 'கோல்மால்' செய்யும் கூட்டணி!
/
கோவில் திருப்பணிகளில் 'கோல்மால்' செய்யும் கூட்டணி!
கோவில் திருப்பணிகளில் 'கோல்மால்' செய்யும் கூட்டணி!
கோவில் திருப்பணிகளில் 'கோல்மால்' செய்யும் கூட்டணி!
PUBLISHED ON : மார் 07, 2026 03:10 AM

இ ஞ்சி டீயை பருகியபடியே, ''இடத்தை காலி பண்ண மாட்டேங்கிறாங்க...'' என, பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''போலீஸ் துறையில், சிறிய அளவுல தப்பு செய்றவங்களை, கன்ட்ரோல் ரூமுக்கு இடமாறுதல் பண்ணுவாங்க... இங்க, வேலைப்பளு அதிகமா இருக்காதுங்க...
''வயர்லெஸ் தகவல்களை கண்காணிச்சு, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களுக்கு தெரிவிக்கிறது தான் இவங்க வேலை... மதுரையில், 50 வயதை தாண்டிய பெண் எஸ்.ஐ.,க்கள், இங்க பணிபுரிய ஆர்வம் காட்டுறாங்க...
''இவங்களை ஸ்டேஷன் பணிக்கு மாத்தினாலும், கொஞ்ச நாட்கள் மட்டும் அங்க இருந்துட்டு, 'மாற்றுப் பணி'யா மீண்டும் கன்ட்ரோல் ரூமுக்கே வந்துடுறாங்க... அதுலயும் ஒரு பெண் எஸ்.ஐ., ஒன்பது வருஷமா கன்ட்ரோல் ரூம்லயே இருக்காங்க... இவங்களை பல முறை ஸ்டேஷன் பணிக்கு மாத்தியும், சுவத்தில் அடிச்ச பந்து மாதிரி மறுபடியும் இங்க வந்துடுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''இடமாறுதல்ல பாரபட்சம் காட்டுறாங்க பா...'' என்ற அன்வர்பாயின் போன் ஒலித்தது. எடுத்தவர், ''பில்கிஸ்... நான் அப்புறம் கூப்புடறேன்,'' என்றபடியே பேச்சை தொடர்ந்தார்...
''தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில், வேளாண் அலுவலர்கள் நிறைய பேர் பணியில் இருக்காங்க... இவங்களை, குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில், வட்டாரம் விட்டு வட்டாரத்துக்கு இடமாறுதல் பண்ணுவாங்க பா...
''ஆனா, மாவட்ட தலைநகரங்கள்ல இருக்கிற வேளாண், உழவர் நலத்துறை இணை மற்றும் துணை இயக்குநர் அலுவலகங்கள்ல பணிபுரியும் வேளாண் அலுவலர்கள், அதே அலுவலகத்தில் இருக்கிற வெவ்வேறு பிரிவுகளுக்கு இடமாறுதல் வாங்கிட்டு, அங்கயே பல வருஷங்களா இருக்காங்க பா...
''இவங்க, தங்களது இடத்தை விட்டு அசையாம இருக்கறதால, வட்டார அளவில் பணிபுரியும் வேளாண் அலுவலர்களுக்கு மாவட்ட அலுவலகங்கள்ல பணிபுரிய வாய்ப்பு கிடைக்காம போயிடுது பா...'' என்றார், அன்வர்பாய்.
''கோவில் பணிகள்ல, 'கோல்மால்' பண்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''துாத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவில்ல, கடந்த சில வருஷங்களா திருப்பணிகள் நடக்கறது... இதுக்காகவே, 'ஸ்ரீ வைகுண்டபதி கைங்கரிய டிரஸ்ட்' என்ற அமைப்பை துவங்கி, நன்கொடை வசூல் பண்றா ஓய்...
''திருப்பணிகளை செய்ய, 3.25 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு ஸ்தபதியுடன் ஒப்பந்தமும் போட்டா... அவருக்கு, 95 சதவீதம் பணத்தை குடுத்துட்டாலும், பெரும்பாலான பணிகள் முடியல ஓய்...
''கோவிலின் உள்பகுதியில் கல் பிரகாரம் அமைக்கற பணிகள் முடியுறதுக்கு முன்னாடியே, வெளி பகுதியில் கல் பிரகாரம் அமைக்க பணம் ஒதுக்கியிருக்கா... உள்ளூர் அமைச்சரின் நிழல் மாதிரி வலம் வர்றவர் தான், கோவில் அறங்காவலர் குழு பதவியில் இருக்கார் ஓய்...
''இந்த விவகாரத்தில், கோவில் நிதி முறைகேடா பயன்படுத்தப்படுறதா, அறநிலையத் துறை அதிகாரி மீதும், கலெக்டரிடம் ஹிந்து அமைப்புகள் புகார் குடுத்திருக்கா... அதிகாரியுடன், அறங்காவலர் குழு கைகோர்த்து முறைகேடுல ஈடுபடுறதாகவும், அதுல சொல்லியிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''அன்புமணி, செந்தில்குமார் இப்படி உட்காருங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

