/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' மாஜி ' அமைச்சரை தோற்கடிக்க மாவட்ட புள்ளி வியூகம்!
/
' மாஜி ' அமைச்சரை தோற்கடிக்க மாவட்ட புள்ளி வியூகம்!
' மாஜி ' அமைச்சரை தோற்கடிக்க மாவட்ட புள்ளி வியூகம்!
' மாஜி ' அமைச்சரை தோற்கடிக்க மாவட்ட புள்ளி வியூகம்!
PUBLISHED ON : பிப் 07, 2026 01:53 AM

''கி ரிக்கெட் அணியை வாங்க, பேச்சு நடக்கு வே...'' என்ற பரபரப்பான தகவலுடன், பெஞ்சுக்கு வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''அதெல்லாம் பல ஆயிரம் கோடி சம்பந்தப் பட்டதாச்சே... யார் ஓய் அந்த பெரும் புள்ளி...'' என கேட்டார், குப்பண்ணா.
''ஐ.பி.எல்.,லில் மொத்தம், 11 அணிகள் இருக்குல்லா... நாட்டின் முக்கிய தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள்னு ஒவ்வொருத்தரும் ஒரு அணியை வச்சிருக்காவ வே...
''தி.மு.க., தலைமைக்கு நெருங்கிய குடும்பத்தினர் ஏற்கனவே, 'சன்ரைசர்ஸ் ஹைதராபாத்' அணியை வாங்கி, நடத்திட்டு இருக்காவ... ஐ.பி.எல்.,ல ரொம்பவே மதிப்பு மிக்க, 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணியை, தமிழக தொழிலதிபர் ஒருத்தர் நடத்திட்டு இருக்காரு... அவரிடம் இருந்து அந்த அணியை வாங்க, துணை முதல்வர் உதயநிதி தரப்புல, பேச்சு நடத்திட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கஞ்சா வியாபாரிக்கு ஆதரவா இருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''வடசென்னையில் புளியந்தோப்பு, பேசின் பாலம் பகுதிகள்ல, கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கு... உள்ளூர் போலீசாரின் முழு ஆதரவும் இதுக்கு இருக்குது பா...
''பேசின் பாலம் பகுதியில், கஞ்சா விற்ற பெண் வியாபாரி மீது வழக்கு பதிவு பண்ணியும், ஆறு மாசமா கைது பண்ணாம விட்டு வச்சிருந்தாங்க... உயர் அதிகாரிகள் தட்டி கேட்டதால, சமீபத்துல அந்தம்மாவை கைது செஞ்சாங்க பா...
''இப்ப, அந்தம்மா ஜாமின் மனு போட்டிருக்கு... இதுக்கு பேசின் பாலம் போலீசார் தரப்புல எதிர்ப்பு தெரிவிக்காம இருக்க, ஒரு லட்சம் ரூபாய் கைமாறியிருக்கு... இதனால, சீக்கிரமே அந்தம்மா வெளியில வந்து, மறுபடியும் கஞ்சா விற்பனையில களமிறங்க போகுது பா...'' என்றார், அன்வர்பாய்.
தன் மொபைல் போனை பார்த்த அந்தோணிசாமி, ''வேலழகி, 'மெசேஜ்' அனுப்பியிருக்காங்க...'' என, முணுமுணுத்தபடியே, ''மாஜி அமைச்சரை தோற்கடிக்க கங்கணம் கட்டியிருக்காருங்க...'' என்றார்.
''எந்த கட்சியில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் - தனி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருந்தவங்க, ராஜலட்சுமி... கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தாங்க... 2021 தேர்தல்ல, தோற்று போயிட்டாங்க...
''வர்ற தேர்தல்ல இதே தொகுதியில் நிற்க முடிவு பண்ணி, வேலைகளை பார்த்துட்டு இருக்காங்க... இந்த முறை, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தா, அவங்க அமைச்சராகிடுவாங்கன்னு அவங்க ஆதரவாளர்கள் சொல்றாங்க...
''இதனால, மாவட்ட அ.தி.மு.க., முக்கிய புள்ளி அதிர்ச்சியில இருக்காரு... ஏன்னா, இவரது அப்பா, ஜெ., ஆட்சியில அமைச்சரா இருந்தாருங்க...
''அவர் மறைவுக்கு அப்புறம், மகனுக்கு மாவட்ட அளவில் கட்சி பதவி குடுத்திருக்காங்க... அப்பா மாதிரியே தானும் அமைச்சராகணும்னு நினைக்கிற மகன், சங்கரன்கோவில் தொகுதியில் இருக்கிற தன் ஆதரவாளர்கள் மற்றும் சமுதாயத்தினர் ஓட்டுகளை மாஜிக்கு எதிரா திருப்பி விட, தீயா வேலை பார்த்துட்டு இருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''கிருஷ்ணமுரளி, நாளைக்கு பார்க்கலாம் பா...'' என, நண்பரிடம் அன்வர்பாய் விடைபெற, மற்றவர்களும் கிளம்பினர்.

