/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
எம்.பி.,யை புறக்கணிக்கும் தி.மு.க., மாவட்ட செயலர்!
/
எம்.பி.,யை புறக்கணிக்கும் தி.மு.க., மாவட்ட செயலர்!
எம்.பி.,யை புறக்கணிக்கும் தி.மு.க., மாவட்ட செயலர்!
எம்.பி.,யை புறக்கணிக்கும் தி.மு.க., மாவட்ட செயலர்!
PUBLISHED ON : நவ 24, 2024 12:00 AM

“ஏடாகூடமா பேசி, வர்றவங்களையும் தடுத்துடுவாரோன்னு பயப்படுதாவ வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“யாருங்க அது...” எனக் கேட்டார், அந்தோணிசாமி.
“சமீபத்துல, திருச்சியில் நடந்த அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டத்துல பேசிய, 'மாஜி' அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'கூட்டணி பேச வந்தாலே, 20 சீட் வேணும்... 50 கோடி, 100 கோடி ரூபாய் வேணும்னு கேட்கிறாங்க'ன்னு அதிரடியா சொன்னாருல்லா வே...
“இதனால, 'சட்டசபை தேர்தல்ல நம்மகூட கூட்டணிக்கு வரலாமான்னு யோசிக்கிற கட்சி கள் கூட பின்வாங்கிடு மோ'ன்னு அ.தி.மு.க., வினரே பயப்படுதாவ...
“விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சு நடத்தவும் இது தடையா இருக்கும் என்பதோட, இப்ப கூட்டணியில இருக்கிற தே.மு.தி.க.,வும் இந்த பணபேரம் பேச்சால், கூட்டணியில நீடிக்குமான்னும் சந்தேகப்படுதாவ...
“இதனால, திண்டுக்கல் சீனிவாசன் மேல, பழனிசாமியும் கடும் அதிருப்தியில தான் இருக்காரு வே...” என்றார், அண்ணாச்சி.
“விட்டதை பிடிக்க போராடுறாங்க பா...” என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
“யாரை சொல்றீர் ஓய்...” எனக் கேட்டார், குப்பண்ணா.
“தமிழகத்துல ஆட்சி மாறியதும், மாநிலம் முழுக்க மணல் குவாரிகளை யாரிடம் தருவாங்கன்னு கேள்வி எழுந்துச்சு... பலத்த யோசனைக்குப் பிறகு, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மணல் அள்ளிய புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த மும்மூர்த்திகளிடமே ஒப்படைச்சுட்டாங்க பா...
“மாசாமாசம் பெருந் தொகை தந்துடணும்னு எழுதப்படாத ஒப்பந் தமும் போட்டிருந்தாங்க... எல்லாம், 'ஸ்மூத்'தா போயிட்டு இருந்த சூழல்ல, முக்கிய இடத்துக்கு போக வேண்டிய தொகையில் சமீபத்துல சிக்கல் ஏற்பட்டிருக்குது பா...
“இதனால, கடுப்பான முக்கிய இடத்து புள்ளி, மணல் குவாரி நிர்வாகத்தை தடாலடியா கைமாத்தி விட்டுட்டார்... இப்ப, பழைய தொகையை விட கூடுதல் தொகைக்கு குவாரிகளை ஒப்படைக்க பேச்சு நடக்குது பா...
“ஆனா, காலம் காலமா மணல் அள்ளிய மும்மூர்த்திகள் விடுவாங்களா... முக்கிய இடத்து புள்ளிக்கு வேண்டிய ஆடிட்டர் ஒருத்தரை பிடிச்சு, மறுபடியும் தங்களது கட்டுப்பாட்டுல மணல் குவாரிகளை கொண்டுவர போராடிட்டு இருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“யார் பக்கம் போறதுன்னு தெரியாம தவிக்கறா ஓய்...” என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
“யாரை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலர் சிவலிங்கம்... இப்ப நடந்து முடிஞ்ச லோக்சபா தேர்தல்ல, கள்ளக்குறிச்சி தொகுதியில் களமிறங்க போராடி பார்த்தாரு... ஆனாலும், அமைச்சர் வேலுவின் ஆதரவாளரான தி.மு.க.,வைச் சேர்ந்த மலையரசனுக்கு, 'சீட்' கிடைச்சு, அவரும் எம்.பி.,யாகிட்டார் ஓய்...
“இதனால, அதிருப்தியான சிவலிங்கம், எம்.பி.,யை கண்டுக்கறதே இல்ல... இப்ப மலையசரன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிச்சுட்டு இருக்கார் ஓய்...
“சேலம் கிழக்கு மாவட்டத்துல மலையரசன் கலந்துக்கற பெரும்பாலான நிகழ்ச்சி களை, சிவலிங்கம் புறக்கணிச்சுடறார்... இதனால, இந்த மாவட்ட நிர்வாகிகள், யார்கூட போறதுன்னு தெரியாம தவிக்கறா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை கச்சேரி முடிய, நண்பர்கள் கலைந்தனர்.

