தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தேர்தல் செலவு எல்லை மீறினால் ஊழலாக கருதுவோம்! வேட்பாளர்களுக்கு ஆணையம் எச்சரிக்கை

 தேர்தல் செலவு எல்லை மீறினால் ஊழலாக கருதுவோம்! வேட்பாளர்களுக்கு ஆணையம் எச்சரிக்கை

 தேர்தல் செலவு எல்லை மீறினால் ஊழலாக கருதுவோம்! வேட்பாளர்களுக்கு ஆணையம் எச்சரிக்கை


PUBLISHED ON : மார் 08, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: 'சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.40 லட்சத்தை கடந்து செலவழித்தால், ஊழலாக கருதப்படும்' என, தேர்தல் ஆணையம் எச்சரித்திருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், 40 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருக்கிறது. வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க, ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆணையம் தரப்பில் குழு அமைக்கப்படுகிறது. செலவினங்களை எவ்வாறு கணக்கிட வேண்டும், பறக்கும் படையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக, அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் பிரிவினர் கூறிய அறிவுறுத்தல்:

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவின தொகையாக ரூ.40 லட்சம் என ஆணையம் நிர்ணயித்துள்ளது. அதை மீறி செலவு செய்தால், 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 77(3) மற்றும் பிரிவு 123(6)ன் படியும், உச்சநீதிமன்ற உத்தரவு படியும் ஊழலாக கருதப்படும். உண்மைக்கு மாறாக செலவு கணக்கு தாக்கல் செய்திருப்பது கண்டறியப்பட்டால், வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்; மூன்றாண்டுக்கு நடைமுறையில் இருக்கும்.

அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகள், வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் ஆணையத்தால் கண்காணிக்கப்படும். சட்டத்துக்கு உட்பட்ட செலவு, சட்டத்துக்கு புறம்பான செலவு என இரு வகையான கணக்கிடப்படும். வேட்பாளர் அலுவலகம், அனுமதி பெற்ற பொதுக்கூட்டம், ஊர்வலம், கொடி, போஸ்டர், விளம்பரங்கள், பிரசாரத்துக்கு அனுமதி பெற்ற வாகனங்கள் பயன்படுத்துதல், உடன் வரும் ஆதரவாளர்களுக்கு உணவளித்தல் போன்றவை சட்டத்துக்கு உட்பட்ட செலவினம். தேர்தல் ஆணைய விலை பட்டியல் அடிப்படையில் கணக்கிடப்படும்.

அரசு, பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்வது, பிளக்ஸ் பேனர், அனைத்து விதமான பிளாஸ்டிக் பேனர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஓட்டளிக்க பணம் கொடுத்தல், மதுபானம் வினியோகித்தல், இதர விதங்களில் வாக்காளர்களை கவர்வதற்கு பரிசுப் பொருட்கள் வழங்குதல் சட்டத்துக்கு புறம்பான தேர்தல் செலவினங்கள். இந்திய தண்டனை சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பிரசாரங்களை வீடியோ எடுக்கும் குழு நியமிக்கப்படும். மூன்று பறக்கும் படை அமைக்கப்படும். ஓட்டுப்பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன் குழுக்கள் பலப்படுத்தப்படும்; கூடுதல் குழுக்கள் ஏற்படுத்தப்படும். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு, அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us