/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மாஜி - மா.செ.,க்களால் இ.பி.எஸ்., விரக்தி!
/
மாஜி - மா.செ.,க்களால் இ.பி.எஸ்., விரக்தி!
PUBLISHED ON : ஜன 16, 2024 12:00 AM

''எப்படியெல்லாம் துட்டு சம்பாதிக்கலாமுன்னு ரூம் போட்டு யோசிக்குதாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.
''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''மதுரை திருமங்கலம் பக்கத்துல மைக்குடி ஊராட்சி இருக்கு வே... இங்கன அ.தி.மு.க.,வை சேர்ந்த மாரியம்மாள் தான் ஊராட்சி மன்ற தலைவியா இருக்காவ...
''வழக்கம் போல எல்லா வேலைகளையும் செய்யுறது
அவரோட கணவர் சீனிவாசன் தான் வே... உள்ளூர் கட்டப்பஞ்சாயத்தில் சீனிவாசன் தான் சூப்பர் ஸ்டாரு... புதுசா யாரு சொத்து வாங்கினாலும், உள்ளாற புகுந்து, 'கட்டிங்'கை
கறந்திடுதாரு...
''இப்ப புதுசா யோசிச்சு, பஞ்சாயத்து நிர்வாகம் போட்ட சாலையை, வேலி போட்டு மடக்கி வச்சிருக்குதாரு... ஆம்புலன்ஸ் கூட போக முடியாம அடாவடி பண்ணுதாராம்...
''பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் கேட்டா, 'ஆறு லட்சம் ரூபாய் கொடுத்தா, ரோடு திறக்கும்'னு சொல்லுதாரு... மாவட்ட கலெக்டர் வரை புகார் சொல்லியும் நடவடிக்கை இல்ல வே...'' என்றார் அண்ணாச்சி.
''மேயரை பார்த்தாலே, எம்.எல்.ஏ.,வுக்கு, 'பி.பி.,' எகிறிடறதாம் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மேயர் தினேஷ் குமார், திருப்பூர் வடக்கு நகர, தி.மு.க., செயலராகவும் இருக்கார்... மாவட்ட அமைச்சர் சாமிநாதனுடன், தினேஷ்
குமாருக்கு ரொம்பவே நெருக்கம் ஓய்...
''சாமிநாதனுக்கும், திருப்பூர் வடக்கு மாவட்ட, தி.மு.க., செயலரும், எம்.எல்.ஏ.,வுமான செல்வராஜுக்கும் ஆகாது...
''அதனால, சாமிநாதனுக்கு நெருக்கமா இருக்கறவாள பார்த்தாலே செல்வராஜ் கடிச்சு குதறிடுவார்... அந்த வகையில, சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் மேயர் தினேஷ் குமார் மேல வெறுப்பை கக்கறார்...
''சமீபத்துல கூட, கட்சி ஆபீஸ்ல நடந்த கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் முன்னால மேயரை கன்னாபின்னான்னு திட்டிட்டார்...
''திருப்பூர் மாநகராட்சியில் போன வருஷம் கொண்டாடின பொங்கல் விழாவை, எம்.எல்.ஏ., வரதுக்கு முன்னாடியே துவங்கிட்டாளாம்... 'இந்த வருஷம் என்ன பண்ணப்போறேள்னு பார்க்கத்தானே போறேன்' என, சவால் விட்டிருக்கார் ஓய்...
''இது தான் நல்ல சான்ஸ் என நினைத்த அமைச்சர் தரப்பு, இவரை பற்றி கட்சி மேலிடத்துக்கு புகாரை தட்டி விட்டுடுத்து ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''இருதலை கொள்ளி எறும்பா, இ.பி.எஸ்., தவிக்குறாராம்...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''வரும் லோக்சபா தேர்தலில், சொந்த கட்சி வேட்பாளர்கள் மட்டுமில்லாம, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் தொகுதி வாரியா பெரிய தொகையை செலவு செய்ய, தி.மு.க., தலைமை திட்டமிட்டு இருக்குதாம்...
''பா.ஜ., தலைமையும் பணத்தை அள்ளி வீச தயாராகிடுச்சாம்... இதனால தான், தொகுதிக்கு 30 கோடி செலவு செய்ய தயாரா இருக்குறவங்களுக்கே, 'சீட்' என, அ.தி.மு.க., தலைமை முடிவெடுத்து இருக்குதாம்...
''இதுக்கு கட்சிக்குள்ள பெரிய எதிர்ப்பு கிளம்பிடுச்சுங்க... 'பதவியில் இருந்தவரை வலுவா சம்பாதிச்ச முன்னாள் அமைச்சர்கள், 20 பேரிடம் ஆளுக்கு ரெண்டு தொகுதிகளை கொடுத்து, 50 கோடி வரை செலவு செய்ய சொல்லுங்க'ன்னு மாவட்ட செயலர்கள் போர்க்கொடி துாக்கிட்டாங்க...
''கொங்கு மண்டலத்தில் நாலு தொகுதிக்கான செலவுகளை பார்த்துக்குறதா, அந்த பகுதியின், 'மாஜி' ஒருத்தர் சொல்லிட்டாரு...
''ஆனா, மற்ற மாஜிக்கள், 'ஜகா' வாங்கிட்டாங்க... 'மாவட்ட செயலர்களையே நிறுத்தி அவங்களையே செலவை பார்த்துக் கொள்ள சொல்லுங்க'ன்னு தலைமைக்கு, 'ஐடியா' மட்டும் தராங்களாம்...
''மாஜிக்களுக்கும், மாவட்டங்களுக்கும் நடுவுல சிக்கி, இ.பி.எஸ்., தவிக்குறாருங்க...'' என்றார் அந்தோணிசாமி. அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.