/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'மாஜி' குற்றவாளி மூலம் 'வசூலிக்கும்' பெண் போலீஸ்!
/
'மாஜி' குற்றவாளி மூலம் 'வசூலிக்கும்' பெண் போலீஸ்!
'மாஜி' குற்றவாளி மூலம் 'வசூலிக்கும்' பெண் போலீஸ்!
'மாஜி' குற்றவாளி மூலம் 'வசூலிக்கும்' பெண் போலீஸ்!
PUBLISHED ON : டிச 20, 2025 12:30 AM

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''பணிகளை முடிச்சும், பணம் வரலன்னு புலம்புறாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி சார்பில், சாலைகள், மழைநீர் கால்வாய்கள் அமைக்கிற பணிகளை, 'டெண்டர்' விட்டு செய்றாங்க... டெண்டர் எடுக்கிற கான்ட்ராக்டர்கள், நகராட்சியின் முக்கிய புள்ளி மற்றும் கவுன்சிலர்களுக்கு, முதல்லயே கமிஷனை வெட்டிடுறாங்க பா...
''அப்படியிருந்தும், முடிச்ச பணிகளுக்கு, நாலு மாசத்துக்கும் மேலா பில் தொகையை வழங்காம இழுத்தடிக்கிறாங்க... 4 கோடி ரூபாய் வரை, கான்ட்ராக்டர்களுக்கு பாக்கியிருக்கு பா...
''அதையே தராம, புதுசா ஒரு கோடி ரூபாய் பணிகளுக்கு டெண்டர் விட்டு, கமிஷன் அடிக்க தயாராகிறாங்க... 'ஏற்கனவே செஞ்ச பணிக்கே பணம் வரல... புது பணிகள் எல்லாம் வேண்டாம்'னு கான்ட்ராக்டர்கள் தலைதெறிக்க ஓடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''திருப்பூர் அதிகாரியின் அடாவடியை கேளுங்கோ ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், புஞ்சை தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருத்தர், தன் தரிசு நிலத்தை சீரமைத்து, விவசாய நிலமா மாத்த நினைச்சார்... இதுக்காக, வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாங்கிட்டார் ஓய்...
''நிலத்தை சீரமைக்க அனுமதி கேட்டு, கடைசியா கனிமவளத் துறை அதிகாரியிடம் விண்ணப்பம் குடுத்தார்... ஆனா, பல மாசங்களா நடையா நடந்தும், நிலத்தை சீரமைக்க அதிகாரி அனுமதி தரல ஓய்...
''அதாவது, நிலத்தில், 1.50 மீட்டர் ஆழம் வரை மண்ணை தோண்டி சீரமைக்க சட்டத்துல இடம் இருக்காம்... இதுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சான்றிதழ் எதுவும் தேவையில்ல ஓய்...
''ஆனாலும், ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி, விவசாயியை அதிகாரி அலைய விடறார்... அதிகாரி, வேற எதையும் எதிர்பார்த்து இப்படி அலைய விடறாரான்னு தெரியல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பிரசாத், இந்த பேப்பரை அங்க வையுங்க...'' என, நண்பரை ஏவிய அந்தோணிசாமியே, ''வசூலுக்கு தனியா ஆள் போட்டிருக்காங்க...'' என்றார்.
''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை, விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துல, ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... இந்த ஏரியாவுல, அனுமதி வாங்காம இயங்கும், 'மசாஜ் சென்டர்'கள், சூதாட்டம், 'குட்கா' விற்பனை கடைகள், விபச்சார தொழில் பண்றவங்களிடம், பெண் அதிகாரி மாதாந்திர மாமூல் வாங்குறாங்க...
''இதை, அவங்களே நேரடியா போய் வசூல் பண்றது இல்ல... பழைய குற்றவாளி ஒருத்தரை, இதுக்காகவே வேலைக்கு வச்சிருக்காங்க... அந்த பழைய குற்றவாளி, போலீஸ் ஸ்டேஷன்லயே காலையில இருந்து சாயந்தரம் வரைக்கும் இருக்காருங்க...
''புகார் தந்தவங்களிடம் பெண் அதிகாரி விசாரிக்கிறப்ப, இவரும் கூடவே இருந்து, கட்டப்பஞ்சாயத்து பேசுறாருங்க.. புகார் அளிக்க வர்ற மக்களை, பெண் அதிகாரி மரியாதை இல்லாம ஒருமையில பேசி மிரட்டுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''வனிதா மேடம்... வீரராஜன், இன்னைக்கு சாயங்காலம் பணத்தை கொண்டு வந்து குடுத்துடுவாரு...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பி னர்.

